வடகிழக்கு பருவமழை விலகியது.... இனி வறண்ட வானிலைதான் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா , ராயலசீமா , தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியது.
சென்னை: தமிழகத்தில் பருவமழைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றுடன் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா , தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப்பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரண்டு பருவமழை காலங்களிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை அக்டோபர் இறுதி வரை நீடித்தது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27 முதல் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் முழுவதுமாக கொட்டித் தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. ஆறுகளில் பெருவெள்ளம் பாய்ந்தது. அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. டிசம்பர் மாதத்தின் இறுதியிலும் மழை கொட்டியதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பருவமழை இயல்பை விட அதிகம்
நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்யும் மழையை காட்டிலும், 59 சதவீதம் அதிகமாக கிட்டத்தட்ட 71 சென்டிமீட்டர் மழை பெய்தது. சென்னையில் 136 சென்டிமீட்டர் மழை கிடைத்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட சென்னைக்கு 74 சதவிகிதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை கிடைத்தது. தை மாதத்தில் கூட திடீரென மழை பெய்தது.

பனி சூழ்ந்த சாலைகள்
மழை நின்றாலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் குளிரின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். கொடைக்கானல், உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வறண்ட வானிலை
வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா , ராயலசீமா , தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம்
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி வரை நீடித்த மழை
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழையால் மழை பொழிவு இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியே வடகிழக்குப்பருவமழை விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்து சில நாட்களே ஆனாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாசி மாதம் அதாவது பிப்ரவரி மாத இறுதி வரைக்குமே பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

கோடையில் வெயில் எப்படி
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரவும் வாய்ப்பு இல்லை அந்த அளவிற்கு எங்கும் நீர் நிறைந்துள்ளதால் கோடை காலத்தை எளிதில் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications