வில்லனை காணோமே! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை! கிறிஸ்துமஸ் அன்று மழை வருமா.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தின் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யுமா பெய்யாதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த சீசனின் முதல் புயலாக மாண்டஸ் புயல் சென்னை- மகாபலிபுரம் இடையே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கரையை கடந்தது.
இந்த நிலையில் அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது இலங்கையை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது.

காற்றழுத்தம்
இந்த நிலையில் இந்த காற்றழுத்தம் குறித்து தமிழ்நாடு பிரதீப் ஜான் தனது பதிவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. மேற்கு நோக்கி வீசும் காற்று இன்னும் வரவில்லை. எனவே காற்றழுத்தமானது தமிழகம் பக்கம் நுழைந்து கனமழையை மாநிலம் முழுவதும் கொடுக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அரிதாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மேற்கண்ட மாவட்டங்களுக்கு மழை பெய்தது. அத்துடன் 20 ஆண்டுகள் கழிந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மழை பெய்ததில்லை.

இரவு நல்ல மழை பெய்தால்
இந்த ஆண்டு கிறஸ்துமஸின் போது இரவு நல்ல மழை வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அடுத்த நாள் நன்றாக தூங்கலாம். வரும் 25 ஆம் தேதி சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் மட்டுமில்லை, உள் மாவட்டங்கள், தென் தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்னும் 76 மி.மீ. மழை பெய்துவிட்டால் போதும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவழை காலத்தில் 1000 மி.மீ. மழையை எட்டிவிடலாம்.

காற்றழுத்தம்
காற்றழுத்தமானது மேற்கு பக்கத்தில் உள்ள மேடான பகுதியில் மோதி மோதி வங்கக் கடலில் இருந்து அரபிக் கடல் நோக்கி நகர்ந்துவிடும். அவ்வாறு நகர்ந்தால் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் ஆகியவற்றில் வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மழை பெய்யும். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி
இந்த காற்றழுத்தம் கன்னியாகுமரி கடல் வழியாக சென்றாலும் ஓக்கி புயலை போன்றதொரு புயல் உருவாக வாய்ப்பில்லை. ஆனால் கடல் கொந்தளிப்பாகவும் பலத்த காற்றும் காணப்படும். சபரிமலைக்கு சென்றிருக்கும் பக்தர்கள் இந்த காலகட்டத்தில் மழையை சந்திப்பர் . ஆனால் அவை பெரு மழையாக இருக்காது. வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் மாஞ்சோலை செல்ல முடிவு செய்திருந்தால் ஜாக்கிரதை. இவ்வாறு வெதர்மேன் தனது பதிவில் மழை குறித்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications