நுபுர் சர்மாவும், ஆ ராசாவும் ஒன்னுதான்! இந்துமதம் குறித்த சர்ச்சையால் வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்
சென்னை: இந்துவாக இருக்கிற வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கின்ற வரை விபச்சாரியின் மகன் என திமுக எம்பி எச் ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நுபுர் சர்மாவும், ஆ ராசாவும் ஒன்று தான் என காயத்ரி ரகுராம் ட்விட் செய்துள்ளார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் இருப்பவர் ஆ ராசா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதாவது இவர் பேசும் பேச்சுகள் சில நேரம் விவாதத்துக்கு உள்ளாகி சர்ச்சையாகி விடும்.
இந்நிலையில் தான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆ ராசா பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சர்ச்சையில் சிக்கி ஆ ராசா
இந்த வீடியோவில் பேசும் ஆ ராசா, ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

கடும் எதிர்ப்பு
இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நாராயண் திருப்பதி உள்பட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக கட்சியினர் தொடர்ந்து ஆ ராசாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
இந்த வரிசையில் பாஜக கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராம் இணைந்துள்ளார். பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம், ஆ ராசாவை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பகுதியில் ஆ ராசாவும், இன்னொரு புறம் நுபுர் சர்மாவும் உள்ளனர். நுபுர்சர்மாவின் படத்தின் அடியில் ‛நுபுர் சர்மா பேசுனா மதநம்பிக்கையை இழிவுப்படுத்துவது' எனவும், ஆ ராசாவின் படத்தின் அடியில் ‛இவரு பேசுனா கருத்து சுதந்திரம்' எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை அவர் #ArrestARaja எனும் ஹஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார்.

நுபுர் சர்மாவை இழுத்தது ஏன்?
நுபுர் சர்மா என்பவர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தார். இவர் கடந்த மே மாத இறுதியில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார். ஞானவாபி மசூதி தொடர்பாக நடந்த இந்த விவாதத்தில் அவர் நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்தியாவின் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நுபுர் சர்மா மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தான் இந்து மதத்தை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ள ஆ ராசாவை அவருடன் காயத்ரி ரகுராம் ஒப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications