பொதுச்செயலாளர் பதவி.. ஓபிஎஸ் எடுத்த அஸ்திரம்.. அதிமுக மோதல் முடிவுக்கு வருமா?
சென்னை: அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே அதிக அளவு உள்ளது. முதல்வர் வேட்பாளராக முன்னணி நிர்வாகிகள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த விரும்புவதால், ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது.
'
இதனிடையே கட்சியை ஓபிஎஸ்ஸும், ஆட்சியை இபிஎஸ்ஸும் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் கட்சியில் பலரும் கோரிக்கை முன்வைத்து வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 28ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்புக்கும் அடைய காரசாரமான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருதரப்பும்அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கலாம் என்று கூறி கூட்டத்தை முடித்தனர்.

இரு தரப்பும் ஆலோசனை
அக்டோபர் 7ம் தேதிக்குள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த கட்சி நிர்வாகிகள் முயன்று வருகிறார்கள். மூத்த அமைச்சர்களும் அவரிடம் பேசிவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று முன்தினம், கேபி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அமைச்சர் உதயக்குமார் ஆகியோரும் ஒபிஎஸ்ஸை சந்தித்து பேசினர். இதனிடையே அன்று மாலையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,. அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரண்டு பேரும் நிர்வாகிகளை அழைத்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் வேட்பாளர்
இதனிடையே நேற்று காலை மீண்டும் ஓபிஎஸ்ஸை கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பொதுக்குழுவில் சொன்னபடி, வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இப்போது தேவையில்லாமல் ஏன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.

ஒரு முறை முதல்வர்
அத்துடன் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இணைப்புக்காக வந்த போது, நீங்கள் இந்த ஒருமுறை துணை முதல்வராகவும்,. எடப்பாடி முதல்வராகவும் இருக்க சம்மதியுங்கள். நீங்கள் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார் என்று கூறினார்கள். இப்போது 2வது முறையாக அதேநிலை தொடர வேண்டும் என்று கூறுகின்றனர். நான் இப்போது துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அதேநேரம் கட்சியை நான் கவனித்துக்கொள்கிறேன். பொதுச்செயலாளர் பதவியை எனக்கு கொடுங்கள் என்று ஓபிஎஸ் கேட்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமரச பேச்சு
இதற்கு எடப்பாடி தரப்பு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லையாம். எனினும் எந்த மோதலும் வேண்டாம் என்று விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். ஒபிஎஸ் கட்சியை பார்க்கட்டும், இபிஎஸ் ஆட்சி நடத்தட்டும் என்று பேசி வருகிறார்கள். சமாதான பேச்சுகள் நிறைவு பெற்றால் அக்டோபர் 7ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்.












Click it and Unblock the Notifications