நீ வேணா புதுக்கட்சி ஆரம்பிச்சு பாரு! காரில் ஏறிய போதே வந்த மெசேஜ்! கடுகடுத்த ஓபிஎஸ்..இதுதான் காரணமா?
சென்னை : இவ்வளவு காலமும் 'அண்ணன் எடப்பாடி' என்றே பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது அணி தரப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ்ஸை மிகவும் கடுமையாக அதுவும் ஒருமையில் பேசியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது அதற்கு பின்னணி என்ன என்பது வெளியாகியுள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் இருவருக்குமிடையிலேயான மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஓபிஎஸ்ஸை இபிஎஸ்ஸோ, இபிஎஸ்ஸை ஓபிஎஸ்ஸோ மறைமுகமாகவே விமர்சித்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரங்கேறிய நிகழ்வுகள், அதற்கு நேர்மாறாக அரங்கேறின. ஆரம்பத்தில் இருந்து இபிஎஸ்ஸை 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி' அவர்கள் என பேசி வந்த ஓபிஎஸ் ஒருமையில் வசைபாடியது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதற்கு பின்னர் 88 மாவட்ட செயலாளர்கள் நியமித்டுள்ளார். மேலும் தலைமைக் கழகம், சார்பு அணிகள் என 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை நேற்று முன் தினம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கடும் விமர்சனம்
நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ்,"ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஓபிஎஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. எடப்பாடி பழனிசாமியே உனக்கு தைரியம் இருக்கா? அப்படி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்" என சவால் விட்டார்.

என்ன காரணம்?
பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு அவர் தரப்பு நிர்வாகிகளை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது மட்டுமல்லாது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளையும் கடுமையான அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி தரப்பு ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை எடப்பாடி ஒருமையில் பேசாத ஓபிஎஸ் முதன்முறையாக ஏன் அவ்வாறு பேசினார் என்பது குறித்தான காரணங்கள் வெளியாகியிருக்கிறது.

இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதியே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிப்படையில் தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த அடுத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம்
பாஜக தலைமையின் ஆதரவு தனக்கு இருப்பதால் எப்படியும் வரும் நாட்களில் கட்சியை கைப்பற்றி விடலாம் என ஓபிஎஸ் மிகுந்த உற்சாகத்தில் இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நகர்வை அவர் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் அந்த கணக்கு வழக்குகளை ஏற்றுக் கொண்டதாகவும் கூட்டம் தொடங்கிய போது அதனை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ததை ஓ.பன்னீர்செல்வதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் இதன் வெளிப்பாடாகவே இதுவரை இல்லாத வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications