‘ஓபிஎஸ் நீக்கம் செல்லும்’ - மீண்டும் திரும்பிய ஆகஸ்ட் 17 நிலை.. ஐகோர்ட் தீர்ப்பால் ஓபிஎஸ் டீம் ஷாக்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை இன்று ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்திருப்பதால், அந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஈபிஎஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று பிறப்பித்த உத்தரவின் மூலம், மீண்டும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்கும்.
அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டது செல்லுபடியாகும்.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கிறார். இதனால் மீண்டும் கடந்த தீர்ப்புக்கு முன்னர் நிலவிய குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது.
போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதுகலமான அதிமுக தொண்டர்கள்!
ஜூலை 11 பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தினர். இந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
பரபரத்த வாதங்கள்
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், விஜய் நாராயண் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 25-ஆம் தேதி உத்தரவிட்டனர்.
உத்தரவு ரத்து
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு சற்று முன்பு அறிவித்தது. அதில், எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஓபிஎஸ் நீக்கம் செல்லும்
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை இன்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்திருப்பதால், அந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பதவி இல்லை
பொதுக்குழு செல்லும் என்று பிறப்பித்த உத்தரவின் மூலம், மீண்டும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்கும். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கிறார்.