காலியான மெயின் விக்கெட்! கூட்டிலிருந்து பறந்த கோவை செல்வராஜ்! உடனே அறிக்கை விட்ட ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியிலிருந்தும் , அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ் விலக்கப்படுவதாகவும் , இதுவரை 3 மாவட்டங்களாக இருந்த கோவை அதிமுக 4 அமைப்பு மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக இரட்டை தலைமை ஒழிக்கப்பட்டு ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த பனிப்போர் தற்போது எரிமலையாய் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக இல்லாமல் அமைதிப் போக்கை கையாண்டு வந்த நிலையில் அதற்கான பலனும் அவருக்கு கிடைத்தது. அதே நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு அறிக்கைகள் என அதிரடி காட்டினார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்-சின் தளபதி போல இருந்தாரே கோவை செல்வராஜ்.. அவருக்கு சப்போர்ட்டா என்னவெல்லாம் பேசினார் தெரியுமா
அதிமுக விவகாரம்
இப்படியாக அதிரடி நிகழ்வுகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான முடிவு கிடைக்குமா? என இரு தரப்பும் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த விவகாரம் ஓடிக்கொண்டே இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். இடையே பாஜகவும் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி வருகிறது. முதலில் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்காமல் பேசி வந்த நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக தற்போது அவர் தரப்பைச் சேர்ந்த சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியின் சேர்த்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ..பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கும் கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிர வைத்திருக்கிறார்.
ஓபிஎஸ் அறிக்கை
இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ்
விலக்கப்படுவதாகவும் , இதுவரை 3 மாவட்டங்களாக இருந்த கோவை அதிமுக 4 அமைப்பு மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். கோவையில் நிர்வாக வசதியை முன்னிட்டு இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த மாவட்டங்கள், கோவை மாநகர், கோவை மாநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு என 4 மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
புதிய நிர்வாகிகள்
அதன்படி, கோவை மாநகர் மாவட்ட செயலாளராக டி.மோகன், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக எல்.இளங்கோ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எம்.மணிமாறன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக பி.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.