தவறான பாதையில் செல்லும் ஓபிஎஸ்.. தப்புக்கு மேல தப்பு.. எம்ஜிஆர் பாட்டு பாடி விமர்சித்த ஜெயக்குமார்!
சென்னை : பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்ற எம்ஜிஆர் பாடல் போல, தவறான பாதையில் ஓ.பன்னீர்செல்வம் சென்று கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்.
இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப ஓபிஎஸ் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரிவுகளும் ஆதரவு
எடப்பாடி பழனிசாமி சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக பதவியேற்க வேண்டும் என்று கட்சியின் கட்டமைப்பு உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க வேண்டும் எனக் கூறி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.

தவறான பாதையில் ஓபிஎஸ்
அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியது குறித்துப் பேசிய ஜெயக்குமார், "அதிமுக ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். எந்த அராஜகப் போக்கும் இங்கே கிடையாது. ஓ.பி.எஸ் அண்ணன் தவறு மேல் தவறு செய்கிறார். எம்ஜிஆர் ஒரு பாடலில் பாடுவார், 'பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை'. அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கி அண்ணன் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார் என்பதை ஆழ்ந்த கவலையை மனக் கஷ்டத்தோடு சொல்லிக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் கலந்துகொள்ள வேண்டும்
மேலும், "அதிமுக பொதுக்குழுவில் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்ள வேண்டும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு ஓ.பி.எஸ் உட்பட எல்லோரும் கட்டுப்பட்டு ஆக வேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும் கூட. எனக்கு ஜோசியம் பார்த்து பழக்கமில்லை. ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அவரிடம் தான் கேட்க வேண்டும். கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஊரோடு ஒத்து வாழ வேண்டும்
தொண்டர்களின் எண்ணத்திற்கு மதிப்பு தர வேண்டும். தொண்டர்களும், பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும் விரும்புவது ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதைத்தான். ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப ஓபிஎஸ் முடிவெடுக்க வேண்டும். பொதுக்குழுவுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் எடுப்பது தவறுக்கு மேல் தவறு செய்வதுதான். இதை ஓபிஎஸ் செய்யக்கூடாது" என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications