"முதலில் சொன்னதே வேற.. ரெண்டே நாளில் எடப்பாடி கையெழுத்து போடணும்னு மாத்திட்டாங்க”- குமுறிய ஓபிஎஸ்!
சென்னை : இரட்டைத் தலைமை என சொன்னபோது, முதலில் நான் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றார்கள். பின் இரண்டு நாளில் அவரும் இணைந்து கையெழுத்திட வேண்டும் என்றார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களின் எண்ணம் கட்சி இணைய வேண்டும் என்று இருந்ததால், நான் அதை ஒப்புக்கொண்டேன் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை. இருந்தாலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

பிளவு படக்கூடாது
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "கட்சி எந்த நேரத்திலும் பிளவு படக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு. கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஆட்சியில் எனக்கு பங்கு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன்.

இரட்டைத் தலைமை
இரட்டைத் தலைமை என்பது பதவியில் மட்டும் என்று முதலில் சொன்னார்கள். அதற்கு ஒப்புக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து ஒவ்வொரு கழக நடவடிக்கைகளிலும் இரண்டு பேரும் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது கழகம் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்து தொண்டர்கள் உள்ளத்தில் இருந்த காரணத்தால் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அந்த முடிவையும் ஏற்றுக்கொண்டேன்.

பிரதமர் அழுத்தத்தால்
4 ஆண்டு காலமாக அவர் முதல்வராகவும், நான் துணை முதல்வராகவும் பணியாற்றினோம். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை. சும்மா பெயரில் துணை முதல்வர் என போட்டுக்கொள்ளலாம் அவ்வளவுதான். இருந்தாலும், பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததால் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

மூர்த்திதான் ஆரம்பித்தார்
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தி தான் முதன் முதலில் 'ஒற்றைத் தலைமை வேண்டும்' என ஆரம்பித்தார். இந்த விஷயம் தொடர்பாக என்னிடமோ, மூத்த நிர்வாகிகளுடமோ கலந்து பேசவில்லை. அறையில் பேச வேண்டிய விஷயத்தை அம்பலத்தில் பேசி விவாதமாக்கியுள்ளனர். பொது வெளியில் பேசியது தவறு.

ஜெயக்குமார் வெளியில் சொன்னார்
கூட்டத்தில் பேசியிருந்தாலும், அது குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது எனச் சொல்லியிருந்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் போய் பேட்டியில் சொன்னதால் இந்த பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாகிவிட்டது. ஆறாண்டு காலமாக நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் 'ஒற்றைத் தலைமை' விவாதம் தேவைதானா எனும் கேள்வி எழுந்துள்ளது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications