திடீரென அசோக் நகருக்கு பறந்த ஓபிஎஸ் வண்டி.. ‘ஒன்றரை மணி நேரம்’- அடுத்த திட்டம் என்ன?.. பன்னீர் பரபர!
சென்னை : எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனக்கு நெருக்கமானவர்களோடு சென்று அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தலைமைக் கழகம் சென்ற ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். ஓபிஎஸ்ஸும் அதிமுக அலுவலகத்துக்கு செல்லத் திட்டமிட்டார்.

ஓபிஎஸ் திட்டம்
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசில் மனு அளித்தனர். ஆனால், அவரது தரப்பின் மனுவுக்கு அனுமதி தர மறுத்து நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று வரும்படி கூறியது காவல்துறை. இதையடுத்து, அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஆலோசனை
இந்நிலையில், இன்று இரவு சென்னை அசோக் நகரில் உள்ள அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஓபிஎஸ் பேட்டி
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பிற்கு பிறகு அங்கிருந்து கிளம்பினர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்தித்தோம் எனத் தெரிவித்தார்.

பொறுத்திருந்து பாருங்க
மேலும் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் தொண்டர்களை மட்டுமே. தொண்டர்கள் என்ன மனநிலையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்றுதான் எங்களுடைய இதயபூர்வமான ஏற்பாடு. எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications