சென்னையில் குவிந்த லீடர்கள்.. 19 மா.செக்களுடன் ‘திடீர்’ மீட்டிங்.. ஓபிஎஸ் கொடுத்த ‘சிக்னல்’ என்ன?
சென்னை : சில நாட்களாக தேனி பெரியகுளத்தில் இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை சென்றார். உடனே சென்னையில் 19 மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் எடப்பாடி அணியில் இருந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஓபிஎஸ்ஸை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இரவோடு இரவாக.. எடப்பாடிக்கு போன அதிர்ச்சி செய்தி.. அஸ்திவாரத்தையே அசைத்த ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
ஓபிஎஸ் டீம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார். மாவட்டங்களை நிர்வாக ரீதியில் பிரித்து, தனக்கு பலன் தரக்கூடிய வகையில் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். விரைவில் பொதுக்குழுவைக் கூட்டவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.
ஈபிஎஸ் டீம் டு ஓபிஎஸ்
கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் இருந்த ஓபிஎஸ், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு வந்தார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சேலம் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
சென்னையில் மீட்டிங்
இந்நிலையில் சென்னை சென்ற ஓ.பன்னீர்செல்வம், பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தனது தலைமையில் நியமிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளான வைத்திலிங்கம்,ஜே.சி.டி பிரபாகர், பெரம்பலூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இருந்தனர்.
என்ன ஆலோசிக்கப்பட்டது?
இந்த ஆலோசனை கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை சிறப்பாக அனுசரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள இந்த மாவட்டங்களில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி தங்களது ஆதரவாளர்களைத் திரட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டிசம்பர் 5
டிசம்பர் 5-ஆம் தேதி தான் ஜெயலலிதாவின் நினைவுநாள், அன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்துவார்கள் என எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணி ஜரூராக மேற்கொண்டு வருகிறது. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அணியினரும் டிசம்பர் 5-ஆம் தேதியே ஜெயலலிதா நினைவு தினத்தை என அனுசரிக்கின்றனர். இதற்காக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்ல இருக்கின்றனர்.
திரட்டி வரவேண்டும்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் திரளாகச் சென்று தங்கள் பலத்தைக் காட்டத் திட்டமிட்டுள்ளதால், அதற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனக் காட்ட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே, சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர்களை அழைத்து, ஆதரவாளர்களை சென்னைக்குத் திரட்டி வருவது பற்றிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஓபிஎஸ் என்கிறார்கள்.
மாவட்டங்களுக்கு வருகிறேன்
முன்னதாக விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடம், விரைவில் உங்கள் மாவட்டங்களுக்கு வர இருக்கிறேன், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.