தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் ‘இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், டெல்லிக்கு சென்று வந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்.
Recommended Video
இன்று சென்னையில் இருந்து தேனி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், இந்தப் பயணத்தின்போதே, தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்ட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்துக்குச் செல்லும் வழியெங்கும் தொண்டர்களின் பிரமாண்ட வரவேற்புக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய 'தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.!
ஒற்றைத் தலைமை
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வரும் நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பிரதமர் மோடியைச் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முயன்றார் ஓ.பி.எஸ். ஆனால், அதற்கு பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில் பாஜக மேலிட புள்ளிகளிடம் பேசியுள்ளார்.
உதவி கேட்ட ஓபிஎஸ்
பிரதமர் மோடிக்கு பதிலாக தன்னிடம் பேசிய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களிடம் அதிமுக விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டையும், இனி என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பதையும் விவரித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கூடாது என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம். வரும் ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழு தனக்கு எதிரான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதால் அதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட திட்டம்
அவர் சொன்னவற்றையெல்லாம் விளக்கமாக கேட்ட பாஜக டெல்லி புள்ளிகள் ஓ.பன்னீர்செல்வத்தற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அமோக ஆதரவு இருக்கும் நிலையில், உங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தால் அது பாஜகவுக்கும் சிக்கலாகவே முடியும் என்பதையும் ஓ.பி.எஸ்ஸுக்கு உணர்த்தியுள்ளனராம்.
திரும்பிய ஓபிஎஸ்
அதிமுகவில் செல்வாகை அதிகரிக்குமாறும், அதற்கேற்ற வகையில் யாத்திரை போன்ற முயற்சிகளை முன்னெடுக்குமாறும் டெல்லி கூறியுள்ளது. இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓபிஎஸ் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பினார். இதையடுத்து ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகம் முழுக்க
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் ஆதரவைப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேனி செல்லும் ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவரது சுற்றுப்பயணம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, அது தொடர்பான அட்டவணையும் இறுதி செய்யப்பட்டு இன்றே வெளியாகும் என கூறப்படுகிறது. இனி தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆபத்துதான் என்றும், விரைந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
நீதி கேட்கும் பயணம்
தனக்கு ஆதரவு அதிகமிருக்கும் தென் மாவட்டங்களில் இருந்து இந்த சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார் ஓபிஎஸ். அதிமுகவில் தமக்கான செல்வாக்கு என்ன என்பதை நிரூபிக்கும் வகையிலும், கட்சியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவதைத் தடுக்கவும், அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்ட அவமானங்களுக்கு நீதி கேட்கும் வகையிலும் இந்த சுற்றுப்பயணம் அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டம்
சென்னையில் இருந்து தனது சொந்த மாவட்டத்திற்குச் செல்லும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வரை உற்சாகமாக பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மதுரையில் இருந்து பெரியகுளத்துக்குச் செல்லும் வழியில் உள்ள 7 இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்து இறங்கி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்வதாக திட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.