வெடித்தது பஞ்சாயத்து! இபிஎஸ் போல அதிமுக ஆபீஸ் போகிறேன்.. போலீசில் ஓபிஎஸ் மனு கொடுத்ததால் பரபரப்பு!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் தமக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ராயப்பேட்டை காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ல் பெரும் வன்மூறை வெடித்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் இபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹைகோர்ட் தீர்ப்பு
இதேபோல ஜூலை 11-ல் இபிஎஸ் தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லுபடியானது.

அதிமுக ஆபீசில் இபிஎஸ்
இதனடிப்படையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதிமுகவின் 66 மாவட்ட செயலாளர்கள், 63 எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

ஓபிஎஸ் மீது கடும் அட்டாக்
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மிக கடுமையாக விமர்சித்தார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி இடமே இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கொள்ளையடிக்க வந்தவர்; பச்சோந்தியைவிட மிக மோசமாக நிறம் மாறுவர் என்றெல்லாம் வெளுத்தெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

நானும் ஆபீஸ் போவேன்.. ஓபிஎஸ்
இந்நிலையில்தான் இன்று சென்னை ராயப்பேட்டை போலீசில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகம் சென்று ஓ.பன்னீர்செல்வம் கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டியதுள்ளது. ஆகையால் அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி தொடருகிறது; அவரை வரவேற்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடுவர்; ஆகையால் இடையூறு இல்லாமல் இருக்க உரிய பாதுகாப்பு தர வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இம்மனுவை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர், போலீசில் கொடுத்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications