திமுக, சசிகலாவுடன் இணைந்து அதிமுகவிற்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வம்: எடப்பாடி ஆவேசம்
ரவுடிகளை அழைத்து வந்து அதிமுக அலுவலகத்திற்குள் இருந்த ஆவணங்களை அள்ளிக்கொண்டு போயிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ரவுடிகளை அழைத்து வந்து அத்துமீறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவை ஒழிக்க துரோகிகளுடன் இணைந்து மு.க ஸ்டாலின் சதி செய்துள்ளார் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வானகரகத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் மோதல் மூண்டது. ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், கம்புகளை வீசியும் தாக்கிக்கொண்டனர். அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை போர்க்களமாக மாறியது.

ரத்தக்களறியான அதிமுகவினர்
அதிமுக நிர்வாகி ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் கையில் மணிக்கட்டில் கத்தி பாய்ந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து நிலைமை மேலும் மோசமாகவே காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதிலும் பல தொண்டர்கள் காயமடைந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, பிற்பகலில் அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து காயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஓபிஎஸ் துரோகம்
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
காவல்துறை உயர் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவில்லை. அத்துமீறி அதிமுக அலுவலகத்திற்கு நுழைந்த ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். ரவுடிகளை கட்சி அலுவலகத்திற்குள் நுழைய விட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் என்றும் குற்றம் சாட்டினார்.

நீதிமன்றம் செல்வோம்
சமூக விரோதிகள் அத்து மீறி தலைமைக்கழகத்தில் நுழைந்துள்ளனர். திமுக, அமமுக, சசிகலா ஆகியோருடன் இணைந்து அதிமுகவிற்கு துரோகம் செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர் ஓ.பன்னீர் செல்வம் என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக என்ன சாப்ட்வேர் கம்பெனியா? யார் வேண்டுமானாலும் நுழைந்து ஆவணங்களை அள்ளி செல்வதற்கு என்று கேட்டார்.

கற்களை வீசி தாக்குதல்
ரவுடிகள் கற்களை வீசி தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரும் தடியடி நடத்தி தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர். எந்த கட்சித்தலைவராவது தொண்டர்கள் அடிவாங்குவதை பார்த்துக்கொண்டிருப்பார்களா? என்று கேட்டார். அதிமுக அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நீதிமன்றம் மூலம் நியாயம் பெற்று அதிமுக அலுவலகம் திறக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் காலம் மாறும் போது காட்சிகளும் மாறும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications