மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற பேங்க் அக்கவுண்ட் இல்லையா? நோ டென்ஷன்.. இதோ இருக்கு மாற்று வழி
சென்னை: மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இதனை பெற வங்கி கணக்கு கட்டாயமாகும். இருப்பினும் அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருந்தாலும் உரிமைத் தொகை கிடைக்கும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பெண்கள் என்றால் இரண்டாம் தர குடிமக்களாகவே இன்றும் இந்த சமூகம் கருதுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை இச்சமூகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள ஏராளமான போராட்டங்களை எதிர்கொள்கிறாள். ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு இயல்பாக கிடைப்பதில்லை. வீட்டிலும் வேலை செய்துவிட்டு வெளியிலும் சென்று தன்னை நிரூபிக்க அவர்கள் இரண்டு மடங்கு உழைப்பை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும், கருத்தியல் போர்களும் தற்போது அவர்களின் நிலையை மாற்ற தொடங்கியுள்ளது.

குறிப்பாக வீட்டில் குடும்பத்திற்காக தனது முழு வாழ்க்கையையும் அற்பணிக்கும் பெண்களை பற்றி இந்த சமூகம் விரிவாக பேச தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுதான் குடும்ப பெண்களுக்கான ஊதியம். நாங்களும் வேலைதான் செய்கிறோம். ஆனால் அது மட்டும் கணக்கில் கொள்ளப்படுவதே கிடையாது என்று கூறிய அவர்கள் தங்களுக்கான ஊதியத்தை கேட்க தொடங்கியுள்ளனர். இதை முற்போக்கு இயக்கங்கள்/கட்சிகள் வரவேற்று ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், எப்போது உரிமைத்தொகை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர். இது பெரும் விவாதமாக எழுந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்றுடன் முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைந்தது.

தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தில் பணத்தை பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் பலரும் அடிக்கடி எழுப்பும் கேள்வி வங்கி கணக்கு குறித்துதான்.
உரிமை தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம். ஆனால் இந்த அக்கவுண்ட் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? என்பதுதான் இந்த கேள்வி. இதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "வங்கி கணக்கு இல்லையெனில் 'இந்தியா போஸ்ட் மேமெண்ட்' வங்கியில் கணக்கு தொடங்கலாம். இந்த அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.
போஸ்ட்மேன் அல்லது கிராம அஞ்சல் ஊழியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், செல்போன் நம்பர், ஆதார் நம்பரை கொண்டு கைரேகையை வைத்து அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதனையடுத்து இந்த கணக்கில் செலுத்தப்படும் உரிமை தொகையை போஸ்ட்மேன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" என தபால்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications