டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவுநாள் மரியாதை! ஓ.பன்னீர்செல்வத்தை முந்திய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: டிச.24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் வருமாறு அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக கொடிகளை ஏற்றி எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும், படங்களுக்கும் அதிமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை முந்திக்கொண்டு அதிமுக தலைமைக்கழகம் மூலம் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

எம்.ஜி.ஆர். நினைவு நாள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் "பாரத் ரத்னா' இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987.எம்.ஜி.ஆரின் 35-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2022 - சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், இடைக்காலப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

உறுதி மொழி
அதனையடுத்து, எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொடியேற்றி மரியாதை
எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளான 24.12.2022 அன்று, அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மலர் அஞ்சலி
கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.12.2022 அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications