ஒரே நாடு ஒரே தேர்தல்: ஓபிஎஸ் பற்ற வைத்த நெருப்பு..இபிஎஸ் கொளுத்திப்போட - அண்ணாமலையும் சொல்லிட்டாரே
ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதாக ஓபிஎஸ், இபிஎஸ் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலையின் கருத்தும் தமிழக அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் உடன் தமிழக சட்டசபைத் தேர்தலும் வரும் என்று ஒபிஎஸ் பற்ற வைத்த நெருப்பு பற்றிக்கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என்று சொல்ல... பாஜகவின் அண்ணாமலை சொன்ன கருத்தும் அதற்கு ஏற்றார் போல உள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 8 முனைப்போட்டி நிலவினாலும் அதிமுக திமுக இடையே பல வார்டுகளில் நேரடி போட்டி நிலவுவதால் தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.
திமுக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் மாறி மாறி சவால் விட்டு பேசி வருகின்றனர். பொதுமக்களுக்கு தலைவர்களின் பேச்சு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சவால் விட அதை ஏற்றுக்கொண்டு நேரடி விவாதம் நடத்த தயார் என்று சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின்னர்தான் ஆட்டம் ஆரம்பமானது.

லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்
கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கம் போல திமுக அரசை குற்றம் சாட்டினார். கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக சிறப்பான ஆட்சி தந்தது என்று கூறிய ஓபிஎஸ், திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக ஆருடம் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் இபிஎஸ் பேச்சு
சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இபிஎஸ், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் விரைவில் நம் ஆட்சி அமையும். இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

ஆருடம் சொல்வது ஏன்
இபிஎஸ் இந்த கருத்தை முதல் முறையாக கூறவில்லை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற கருத்தைக் கூறினார். இரண்டரை ஆண்டு காலம்தான் திமுக ஆட்சி இருக்கும் என்றும் ஆருடம் கூறினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசார களத்திலும் அந்த கருத்தை ஆணித்தரமாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணாமலை சொன்னது என்ன?
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஓபிஎஸ், இபிஎஸ் கருத்துக்கு பதில் சொன்ன அண்ணாமலையோ, தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நான் இப்போதைக்கு கூற முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுக எப்படி ஆட்சி நடத்துகிறது.... இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப்பொருத்தே ஒரே தேர்தல் நடக்குமா? 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் நடைபெறுமா என்றும் கூறினார். ஆள் ஆளுக்கு சட்டசபைத் தேர்தல் பற்றி பேச அசராத முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான் நடைபெறும் என்று கூறி திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications