பொன்னியின் செல்வன் படத்தில் சர்ச்சை.. நாராயணா, இலங்கை தேசம் தொடர்ந்து புதிய ’சிங்கள’ பஞ்சாயத்து!
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சினிமா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இலங்கையில் இருந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் மெகா திரைப்படத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்திருக்கின்றன. உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நாராயணா சர்ச்சை
பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே முன்னோட்ட காட்சிகளைக் கொண்டே சர்ச்சைகள் வரிசையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழில் வெளியான முன்னோட்டத்தில், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம், நாராயணா என சொல்வதற்கு பதில் அய்யய்யோ என சொல்வதாக இருக்கிறது; பிற மொழிகளில் நாராயணா என்றே இருக்கிறது. அது எப்படி நாராயணா என ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் சொல்வதை மாற்றலாம் ? என்பது ஒரு சர்ச்சை.இன்னொன்று, பொன்னியின் செல்வம் படத்தில் இலங்கை தேசம் என குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தில் அது ஈழ தேசம்தான்; இலக்கியங்கள், கல்வெட்டுகள் அனைத்திலும் ஈழ தேசம் என்றுதானே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இலங்கை தேசம் என சொல்ல வைத்தார் மணிரத்னம்? என்பது இன்னொரு விவகாரம்.
லைகாவுக்கு கடிதம்
இப்போது இந்தி முன்னோட்டத்தில் இலங்கை தேசத்துக்குப் பதில் சிங்கள தேசம் என சொல்லப்பட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரனுக்கு ஈழத் தமிழர் K Ratnajothy என்பவரெ எழுதியுள்ள கடிதம்: வணக்கதுக்குரிய சுபாஸ்கரன் @LycaProductions நீங்கள் முதல்தடவை தயாரித்த கத்தி படத்தி்ல் வரும் கிராமத்தின் பெயர் தண்ணீரூற்று என்று சூட்டியிருப்பீர்கள்.அதாவது உங்களுடைய சொந்த ஊரான முல்லை மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தண்ணீரூற்று கிராமத்தின் நினைவாக வைத்தீர்கள். உங்கள் மேல் பலர் பல்வேறு விமர்சனம் வைத்தாலும் நீங்கள் பிறந்த மண்ணின் மேல் ஆழமான பற்றை கொண்டவர் என்கிற எண்ணம் எம் மக்கள் மத்தியில் உள்ளது. உங்களுடைய இந்த வளர்ச்சி ஒரே ஊரை சேர்ந்தவனாக எம்மை சந்தோசபடவும், மகிழ்ச்சியடையும் வைத்துள்ளது.
சிங்கள தேசமா?
உங்கள் மேல் கொண்ட பெருமதிப்பினாலே ஒரு வேண்டுதலை வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன்... நீங்கள் தற்போது தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல்பாகத்தின் ஹிந்தி மொழி டிரைலரில் ஒரு காட்சியில் "சிங்கள தேசம்" என்கிற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதாசிரியர் ஐயா கல்கி எந்த இடத்திலும் அந்த ஒரு வார்த்தையை பயன்படுத்தவில்லை.எனவே அந்த ஹிந்தி டரைலரி்ல் தவறுதலாகவே பதியப்பட்டுள்ளது.ஓரு ஈழத்தமிழனாக இங்குள்ள பிரச்சினைகளை தாம் அறிவீர். ஏற்கனவே பேரினவாதம் இலங்கை முழுவதும் சிங்கள தேசம் என அறைகூவல் விடுத்தவாறு உள்ளது. எனவே நாமே எம்முடைய படைப்பில் இவ்வாறான தவறுகளை விடுவது அவர்களின் பரப்புரை சரி என்பதை நிருபீப்பது போன்று ஆகிவிடும். எனவே PS1 தயாரிப்பாளராக, ஒரு ஈழத்தமிழனாக பொன்னியின் செல்வன் ஹிந்தி பதிப்பில் இருந்து அந்த வாரத்தையை அகற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.