தப்புக்கு மேல தப்பு பண்றீங்க..! ஓபிஎஸ்ஸை நேரடியாக கண்டித்த டி.ஜே! ’அவர்’ என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : தவறுக்கு மேல் தவறு செய்கிறார் பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக விமர்சித்துள்ள நிலையில், இன்று மாலை வரை பொறுத்திருங்கள் பின்னர் என்ன நடக்கிறது பாருங்கள் என தனது தரப்பு நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
கடந்த சில நாட்களாக ஓ பன்னீர்செல்வம் தரப்பை மறைமுகமாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விமர்சித்து வந்தனர். குறிப்பாக ஜெயகுமார் வெளிப்படையாக யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசிவந்தார்.
ஆனால் இன்று ஓ.பன்னீர்செல்வம் என நேரடியாகவே விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் அதிமுகவில் இறுதிக்கட்ட நகர்வுகளை தொடங்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.

ஏற்பாடுகள் தீவிரம்
வானகரத்தில் உள்ள மண்டபத்தில் தற்போது இருந்தே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் கட்சியினரும் அங்கு ஏராளமாக குவிந்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பிரம்மாண்ட அளவில் வானவேடிக்கை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என்பதால், பார்க்கிங் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் விமர்சனம்
இந்நிலையில் தவறான பாதையை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார் அந்த கவலையை மனக்கஷ்டத்தோடு வெளிப்படுத்துகிறேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக., அனைத்து பிரிவுகளும், அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் அதிமுக.,விற்கு தேவை என தீர்மானித்துள்ளது. அதற்கு இபிஎஸ் பதவி ஏற்க வேண்டும் என நேரில் தெரிவித்துள்ளனர்." என கூறியிருந்தார்.

ஓபிஎஸ் நம்பிக்கை
ஜெயக்குமார், ஓ.பன்னீர் செல்வத்தை நேரடியாக விமர்சித்தது குறித்து அவரது தரப்பு நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் காதுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இதையெல்லாம் கேட்ட ஓபிஎஸ், கடந்த காலங்களில் ஜெயக்குமார் தன்னிடம் எப்படி நடந்துகொண்டார். எடப்பாடியின் எழுச்சிக்குப் பிறகு தற்போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை நன்கு உணர்ந்து இருக்கிறேன் என விரக்தியோடு பேசியுள்ளார். ஆனாலும் கட்சியை கட்டிக்காக்க வேண்டும் என்றால் இதுபோன்ற விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என கூறியுள்ள ஓபிஎஸ், இன்று மாலை வரை பொறுத்திருங்கள் பின்னர் என்ன நடக்கிறது பாருங்கள் என தனது தரப்பு நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.

சசிகலாவுடன் சந்திப்பு
நேற்றே நாம் கூறியது போல இன்று மாலைக்குள் சசிகலா தரப்பில் இருந்து முக்கியமான ஒரு தகவல் வர இருக்கிறது எனவும், அது வந்தபின் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோர் உடன் ஓபிஎஸ் கைகோர்ப்பார் எனவும், நாளை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்க திட்டமிட்டு இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ஓ.ராஜா, புகழேந்தி ஆகியோர் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications