மூன்று முறை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த நிகழ்கால பரதன் எனது தந்தை.. ஜெயபிரதீப் பரபரப்பு அறிக்கை
சென்னை: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பிற்கு பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கடிந்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்திற்கு ஜெயபிரதீப் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இரு தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பற்றியும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் பற்றியும் புகார்கள் தலைமையிடம் சகோதரர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டது என்றும் அதை முன்னிட்டு கலந்து கொண்டவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் கேள்விப்பட்டேன்.
விளக்கம்
இந்த நிகழ்வுகளில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக இது குறித்து தகுந்த விளக்கத்தை ராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகத்திடம் தெளிவாக தெரிவித்துவிட்டேன். மேலும் இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருவதால் இதற்கு உண்டான தகுந்த விளக்கத்தை இந்த பதிவின் மூலமாக தெளிவுப்படுத்துகிறேன்.
அய்யனார் கோயில்
ராமநாதபுரம் திருவாடானை பகுதியில் அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்திற்கும் ஆர் எஸ் மங்கலத்தில் ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதே போல் திருவாடானையில் ஆதிதிராவிடர் கோயில் கட்டுமானப் பணிகளை நேரில் வந்து பார்க்குமாறும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது அனைத்துமே கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் அல்ல.
தனிப்பட்ட நிகழ்ச்சிகள்
எனது தனிப்பட்டட நிகழ்ச்சிகள். இந்த விழாவிற்கு நான் வருகிற போது அந்த விழா கமிட்டி நபரகளிடம் ஆடம்பரமான வரவேற்பு எதுவுமே எனக்கு வழங்க வேண்டாம். சால்வை, மாலைகள் போன்ற எதுவுமே அணிவிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தேன். அதே போல இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் மாவட்ட நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக நான் தெரிவிக்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன் மருது எனது குடும்ப நண்பர் என்பதால் அவரிடம் மட்டும் தெரிவித்துவிட்டு மாவட்டச் செயலாளரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து யாரும் வரவேண்டாம் என கூறியிருந்தேன். நான் வருவதை அறிந்து என்னுடைய நண்பர்கள் ஒரு சிலர் அன்பின் காரணமாக எனது புகைப்படத்தை வெளியிட்டு சால்வை, மாலை அணிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள்.
புகைப்படம்
இதற்கு முன்பே என்னுடைய பதிவுகளில் என்னுடைய புகைப்படத்தை தலைவர்கள் படத்தை விட பெரிதாக பயன்படுத்த வேண்டாம் என பல முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன. நான் புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆகியோரின் கொள்கைகளை உயிராக மதிப்பவன். மூன்று முறை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த நிகழ்கால பரதனின் ரத்தம்!
22 கால பொது வாழ்க்கை
என்னால் கழகமும் கழக உறுப்பினர்களும் ஒரு சதவீதம் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய 22 கால பொது வாழ்க்கையில் எனது புகைப்படத்தை வெளியிடுங்கள் என ஒரு நபரிடம் கூட நான் கூறியது கிடையாது. இந்த உலகத்தில் பெயர், புகழ் , செல்வாக்குப் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. எனது சுயநலத்திற்காக எனது நண்பர்களை ஒரு போதும் பயன்படுத்தியது கிடையாது. இனி வரும் காலங்களில் பயன்படுத்தவும் மாட்டேன் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.
புகைப்படத்தால் வேதனை
எனது புகைப்படத்தை பார்த்து ஒரு சிலருக்கு மனம் வேதனைப்பட்டிருந்தால் அவர்களிடத்தில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் நான் தாழ்மையுடன் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன். கழகத்தில் எந்த பதவியிலும் நான் இல்லை. ஆகவே எனது புகைப்படத்தை கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் வெளியிடுவது நல்லதா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள், மாவட்டக் கழகம் மற்றும் தலைமைக் கழகம் வெளியிட்ட புரோட்டோக்கால்படி செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது. நான் அரசியல்வாதியாக உங்களுக்கு பயன்படுவேனா என்று எனக்கு தெரியாது; ஆனால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நண்பனாக, உற்ற துணையாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.