அதான் ஆதாரம் இருக்குல்ல.. பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. எடப்பாடிக்கு எதிராக சீறிய புகழேந்தி!
சென்னை : ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது, ஆதாரம் இருக்கும்போது எதற்காக இதுவரை யாரையும் கைது செய்யாமல் வெளியில் விட்டுவைத்துள்ளீர்கள்? என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையில் எடுத்து அட்டாக் செய்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்க்கு பச்சை கொடி? அதிமுகவில் பிரிவார்கள்.. தேர்தலில் ஒன்றாக சேருவார்கள்! செல்லூர் ராஜு அதிரடி!
ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ஓபிஎஸ் அணியில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட புகழேந்தி நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ஆதாரம் இருக்கும்போது
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் தான் கோர்ட்டில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்; கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆகவே விசாரணையை துவக்குங்கள். எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கும்போது எதற்காக இதுவரை யாரையும் கைது செய்யாமல் வெளியில் விட்டுவைத்துள்ளீர்கள்?
வேடிக்கை பார்ப்பது ஏன்?
எதனால் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை. இதைத்தான் மக்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினருக்கு கூட இதில் சந்தோஷம் இல்லை. ஏன் விட்டு வைத்துள்ளார்கள் என்றுதான் அனைவரும் கேட்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதுதான் எல்லோருக்கும் இருக்கும் கேள்வி.
ஜெயில்ல போடுங்க சார்
ஓட்டு போடாதவர்களுக்கும் முதல்வர் என்று சொல்லுகின்ற ஸ்டாலினிடம் அன்போடு நான் கேட்பது இதைத்தான். பிடிச்சு உள்ள போடுங்க சார் கொலைகாரனும், கொள்ளைக்காரனும் நாட்டில் வெளியில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மைக்கை பிடிக்கிறார்கள். சாதனை செய்ததாகப் பேசுகிறார்கள். அதில் முதல் ஆளாக நிற்பவர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பினால் தான் மக்கள் அறிவார்கள், தொண்டர்கள் உணர்வார்கள். அப்பொழுதுதான் ஓபிஎஸ்ஸின் அருமை என்னவென்று நாட்டு மக்களுக்கு புரியும்.
மூன்றாவது மீட்பர்
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ளது. முதல் மீட்பாளராக எம்ஜிஆர் இதனை மீட்டெடுத்தார். அதிமுக கட்சி பிரிந்த நேரத்தில் ஜெயலலிதா இந்த கட்சியை இரண்டாம் மீட்பாளராக மீட்டெடுத்தார். சின்னத்தையும் மீட்டு, பிரிந்த கழகத்தையும் இணைத்தார். அதே நிலை இப்போது ஓபிஎஸ்க்கும் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் இந்த இயக்கத்தை மூன்றாவதாக மீட்டெடுப்பார். இதுபோன்ற சர்வாதிகாரிகள், கொள்ளைக்காரர்களிடத்தில் விட மாட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை." எனத் தெரிவித்தார்.
மன்னிப்பு
மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் வழங்கி விட்டு கட்சியில் இணைந்து கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான ராஜன் செல்லப்பா கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, விரைவில் சிறைக்குச் செல்ல இருப்பவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது எனத் தெரிவித்தார்.