கோவை செல்வராஜுக்கு மீண்டும் தூது? ஓபிஎஸ் தான் அப்பவே சொல்லிட்டாரே! புகழேந்தி சொன்ன அந்த வார்த்தை..!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மீண்டும் வரும்படி, கோவை செல்வராஜுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவிலிருது திடீரென விலகியுள்ளார்.
இது அரசியல் அரங்கில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்தார் ஓபிஎஸ். இந்நிலையில், அவர் மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்ப வேண்டும் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டுபட்ட அதிமுக
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் முதல் உச்சகட்டமாக நடந்துவந்த அதிகார மோதலில் தலைமைப் பதவியைப் பிடிப்பதில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 5 மாதங்களாக அதிமுகவே ஓபிஎஸ் அணி - ஈபிஎஸ் அணி என இரண்டுபட்டுக் கிடக்கிறது.

கோவை செல்வராஜ் விலகல்
அதிமுகவில் அதிகார மோதல் நீடித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். இது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கோவை செல்வராஜ்,
ஓபிஎஸ் அணிக்காக முன்னின்று ஈபிஎஸ் அணியினரை விளாசி வந்தார். இந்நிலையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியிலிருந்தும் அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுயநலம்
தனது விலகல் குறித்துப் பேசிய அவர், "ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சுயநலத்திற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை. அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இனியும் அதில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளேன். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன். ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன். நல்ல முடிவை விரைவில் எடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.

பதவிக்காக
மேலும் முக்கியமான குற்றச்சாட்டாக கோவை செல்வராஜ் முன்வைத்தது ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்பதுதான். அவர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவைவிட பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால் முடியவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் முறையாக சிசிச்சை அளிக்கவில்லை. அந்த நேரத்தில் பதவியில் இருந்த இவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. இந்த செயலை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என விமர்சித்துள்ளார்.

விடுவித்த ஓபிஎஸ்
கோவை செல்வராஜ், விலகல் முடிவை எடுத்ததுமே ஓபிஎஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். கோவையில் நிர்வாக வசதியை முன்னிட்டு இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த மாவட்டங்கள், கோவை மாநகர், கோவை மாநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு என 4 மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர் மாவட்ட செயலாளராக டி.மோகன், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக எல்.இளங்கோ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எம்.மணிமாறன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக பி.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்தார்.

ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டார்
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புகழேந்தி, "கோவை செல்வராஜ் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது குறித்து பேசியிருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்த 34ஆவது நாள் அவரை வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

புகழேந்தி அழைப்பு
இதை விஜயபாஸ்கரிடமும் தலைமைச் செயலாளரிடமும் கூறிவிட்டேன், அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் கூறினேன் என்று ஓபிஎஸ் சொன்னார். இப்போது இந்தப் பிரச்சனையை ஏன் கோவை செல்வராஜ் பேசுகிறார் எனத் தெரியவில்லை. இதுவரை ஓபிஎஸ் அணியில் இணக்கமாக தான் இருந்தார். ஆனால் தற்போது ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. திராவிட இயக்கத்தில் தொடர்வேன் எனச் சொல்லி இருக்கிறார். கட்சி மாறுகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவருடைய மனப்பக்குவத்தை திருத்திக் கொண்டு மீண்டும் இங்கு வர வேண்டும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications