பிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்தநாளை கொண்டாடட்டும், அப்படியாவது கொரோனா தடுப்பூசி அதிக மக்களுக்குக் கிடைக்கட்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 71வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமம் கிராமமாக சென்று பாஜக தொண்டர்கள், மக்களை தடுப்பூசி போடும் இடங்களுக்கு அழைத்து வந்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்
மேலும், பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் அளவை குறைத்துக் கொண்டு அந்த தடுப்பூசிகளை மொத்தமாக நேற்று செலுத்தின. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஒரு உலக சாதனையாகும். ஒரே நாளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.

தினந்தோறும் கொண்டாடுங்கள்
இந்த நிலையில்தான் பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதை, நீங்களே பாருங்கள்: உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் பிரதமரின் பிறந்தநாள் தினத்தன்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் செலுத்தும் தடுப்பூசி அளவைவிட நேற்று அதிக அளவுக்கு இந்த மாநிலங்கள் செலுத்தியுள்ளன. ஆனால் மற்ற நாட்களில் அவை செயல்படாத மாநிலங்களாக இருக்கின்றன. எனவே பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்தநாளை கொண்டாடும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சராசரி அளவு இதுதான்
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 முதல் 80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி அதைவிட சுமார் மூன்று மடங்கு அளவுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் ஒரு கோடி என்ற தினசரி சராசரி அளவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் வந்து சேரவில்லை.

சமூக இடைவெளி இல்லை
ஒரே நாளில் அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்டதால் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்தனர். இது நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை பிறப்பித்தனர். இந்த நிலையில்தான், ப.சிதம்பரம் இந்த சாதனை அளவு விஷயத்தை கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications