பவளவிழா காணும் ப.சிதம்பரம்... கொரோனாவால் கொண்டாட்டம் தவிர்ப்பு.. களையிழந்த ஹாடோஸ் சாலை..!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது 75-வது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற வரவேண்டாம் என ஏற்கனவே ப.சி. தரப்பில் இருந்து ஆதரவாளர்களுக்கு கறார் உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ம் தேதி நலத்திட்ட உதவிகள், வாழ்த்துப் போஸ்டர்கள் என களைக்கட்டி காணப்படும் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை இன்று உற்சாகமிழந்து காணப்பட்டது.

பிறந்தநாள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என பலரும் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தம்மிடம் வாழ்த்துக் கூறுவதற்காக அழைத்தவர்களிடம் அவர்களின் உடல்நலம் மற்றும் அரசியல் நிலவரங்கள் பற்றி கேட்டறிகிறார் ப.சிதம்பரம்.

இந்த ஆண்டு
ப.சிதம்பரம் பவள விழா காண்பதால் இந்தாண்டு அவரது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு கொரோனா பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டு ப.சி. திஹார் சிறையில் இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இந்தாண்டு கொரோனா பேரிடர் காரணமாக வழக்கமான உற்சாகம் இல்லை. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தனது பிறந்தநாளன்று தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் ப.சிதம்பரம் சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட உதவிகள்
சென்னையை பொறுத்தவரை ப.சிதம்பரத்தின் பிறந்தநாளன்று அவரது அபிமானிகளான முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையும், மகிளா காங்கிரஸ் நிர்வாகியான ஹசீனா சையத்தும் தடபுடலாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். வழக்கம் போல் இந்தாண்டும் அந்த நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா முன்கள வீரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் சென்னை போரூர் பகுதியில் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார் ஹசீனா சையத்.

ப.சி.அபிமானிகள்
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி அது தொடர்பான விவரங்களை வாட்ஸ் அப் மூலம் கார்த்தி சிதம்பரத்துக்கு அனுப்பி வருகின்றனர். கொரோனா பேரிடர் காரணமாக ப.சிதம்பரம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியும் நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதில் போட்டியிட சீட் பெறும் முயற்சியின் ஒரு கட்டமாக பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications