"முககவசம் இன்றி வெளியே சுற்றினால்..." தமிழக சுகாதாரத் துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு
கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு தயக்கமின்றி அபராதம் விதிக்க சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் பலரும் அலட்சியம் காட்டி வருகின்றனர். தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தயக்கம் இன்றி அபராதம் விதிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரேநாளில் 33,750 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்தியாவில் இதுவரை 4,81,893 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1, 594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,51, 128 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் கேர் மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. வருகின்ற 10ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா தடுப்பு விதிகள் வகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டம் கூடுவதற்கான விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த விதிகளை மீறுவோருக்கு தயக்கமின்றி அபராதம் வசூலிக்க சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலகட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அபராதங்களில் தளர்வுகள் காட்டப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications