சாதாரண சளி, காய்ச்சல்... பற்றிக்கொள்ளும் கொரோனா பீதி... கசாயத்தை நாடும் மக்கள்
சென்னை: சளி, காய்ச்சல், உள்ளிட்ட நோய்கள் கொரோனாவுக்கான அறிகுறிகளாக பார்க்கப்படுவதால் சாதாரண சளி பிடித்தால் கூட கொரோனா வந்துவிட்டதோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் மக்கள்.
மேலும், சளி, காய்ச்சல் என்றாலே அது கொரோனாவாக தான் இருக்குமோ என நினைக்கும் பலர், இது குறித்து வெளியில் சொல்லாமலேயே வீட்டில் கை வைத்தியங்களை பார்த்துக்கொள்கின்றனர்.
இதனிடயே கொரோனாவுக்கும், சாதாரண சளி, காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து சுகாதாரத்துறை தரப்பில் உரிய விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா சவால்: காசிமேடு.. கோயம்பேடு ஆகாமல் காக்க சில டிப்ஸ்!
கொரோனா அறிகுறி
உலகில் சளி, காய்ச்சல் வராத மனிதர்களே இருக்க முடியாது. தண்ணீர் மாற்றிக் குடிப்பதால் ஏற்படும் சளி, தூசியினால் ஏற்படும் அலர்ஜி மூலம் உண்டாகும் சளி, குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும் சளி, என சளி பிடிப்பதற்கு இப்படி பல்வேறு காரணிகள் உள்ளன. இதில் கொரோனாவுக்கான அறிகுறிகளில் முதன்மையானதாக சளி பிடித்தல் இடம்பெற்றிருப்பதால் கடந்த 3 மாத காலமாக பொதுமக்கள் ஒரு வித பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
கடும் எச்சரிக்கை
மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மெடிக்கல்களில் மருந்து மாத்திரைகள் வழங்கக்கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சளி, காய்ச்சலுக்கு, மெடிக்கல் ஷாப்களில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடும் நடைமுறை பரவலாக இருந்து வந்தது. கொரோனா வருகைக்கு பின்பு இந்த நடைமுறை காணாமல் போய் உள்ளது. காரணம் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சளி, காய்ச்சலுக்கு மெடிக்கல்களில் மருந்துகள் கொடுப்பதில்லை.
சோதனை
இதனால் மருத்துவமனைகளுக்கு சென்றால் அங்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு கொரோனா இருப்பதாக முடிவு வந்துவிடுமோ என தங்களுக்கு தாங்களே சந்தேகிக்கும் பலர், தங்கள் வீடுகளிலேயே மூலிகை மருந்து மற்றும் கை வைத்தியங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதனிடையே சளி, காய்ச்சல் வந்தவர்கள் கொரோனா சோதனைக்கு தயங்குவதற்கு காரணம் பணமும் ஒன்று. கொரோனா சோதனைக்கு தனியார் ஆய்வகங்களில் முதலில் ரூ.8,000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் அது ரூ.4,500 ஆக குறைக்கப்பட்டு இப்போது ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய உணவுபொருட்களை எல்லோராலும் வாங்கி உண்ண முடியாத நிலை தான் இன்று உள்ளது. ஆகையால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பண்டங்களை பொதுமக்களுக்கு அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், இந்த விவகாரத்தில் சாதாரண சளி காய்ச்சலுக்கும், கொரோனாவுக்கான சளி காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.