காவல்துறையின் அடுத்த அதிரடி.. 14 நாட்களில் அபராதம் செலுத்தாவிட்டால் 'போதை' வண்டி ஏலத்தில் போய்விடும்
சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.
இந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

புதிய அபராத விதி
இதன்மூலம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், செல்போன் பேசி வாகனம் ஓட்டினால் ரூ.100, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ரூ.10 ஆயிரம் அபராதம்
அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் முதல் போக்குவரத்து போலீசார் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

போக்குவரத்து போலீஸ்
ஆனால் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதித்த அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்புகின்றனர்.

எச்சரிக்கை
நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications