இயற்கையை காப்பாற்ற எங்களுக்கு வேறு வழி தெரியல... பிளாஸ்டிக் தடை குறித்து உருகிய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று சினிமா பாணியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக பார்க்கப்படும் படம் மணிரத்னத்தின் நாயகன்.. அதில் ஹீரோவாக நடித்த கமலஹாசன்.. தமது மகளுடன் உரையாடும் காட்சி ஒன்று வரும். வேறு வழி தெரியலடா கண்ணா என்று அவர் பேசும் வசனம் ஏக பிரபலம்.
இணைய வசதி, தகவல் தொடர்பு வசதிகள் அவ்வளவாக அறிமுகமாகாத காலத்தில் இந்த வசனம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பாப்புலர். அதே போன்றதொரு வாக்கியத்தை பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த சில மாதங்களாக தமிழக அரசு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருகிறது.

வேறு வழி தெரியவில்லை
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

இறக்கும் மீன்கள்
நமது கடற்கரைகளில் ஏராளமான பெரிய மீன்கள், இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த மீன்களின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுக்கப்படுகின்றன.அதற்கு மட்டுமல்ல, நிலத்தடி நீரும் உயருவதற்கு பிளாஸ்டிக் பெரும் தடையாக உள்ளது.

பிரச்னைகள் தொடர்கின்றன
பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. எங்களுக்கு அதை தடை செய்வதைத் தவிர, வேறு வழியே தெரியவில்லை. இயற்கையை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம் 14 வகையான பொருட்களுக்கு தான் அரசு தடை செய்துள்ளது.

தடை விதித்த நீதிமன்றம்
மற்ற பொருட்களை எல்லாம் வழக்கம் போல பயன்படுத்தலாம். ஆனாலும், உயர் நீதிமன்றம் எல்லா பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொல்கிறது. மக்களும், பிளாஸ்டிக் தடையை வெற்றிகரமாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உரிய மாற்று வழிகள் குறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications