இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது; இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு!
சென்னை: இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
Recommended Video
நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் முடிவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆளுநர் கிடப்பில் போட்டார்
இதற்கிடையே தமிழக அரசு இவர்கள் ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி அந்த கோப்பினை தமிழக ஆளுநர் வசம் அனுப்பியது. ஆனால் இந்த நடைமுறை நடந்து பல மாதங்கள் ஆகியும் ஆளுநர் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார்.
குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பாரா?
இதனை தொடர்ந்து ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும், 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று ஆளுநர் நைசாக ஜகா வாங்கி விட்டார். குடியரசுத் தலைவராவது நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
பல காலம் காத்திருக்கும் அற்புதம்மாள்
இவ்வாறு 7 பேர் விடுதலை தொடர்பான அறிவிப்புகள் இறுதி வடிவம் பெறாமல் டெல்லி, தமிழ்நாடு என சுற்றி, சுற்றி வருகிறது.7 பேர் விடுதலையில் அதிமுக - பாஜக அரசு கபட நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தனது மகன் பேரறிவாளன் இப்போது வருவார், அப்போது வருவார் நல்ல முடிவு பிறக்கும் என்று பல ஆண்டுகளாக விழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் அற்புதம்மாள்.
எத்தனை யுகங்கள் போராடுவது
இந்த நிலையில் அற்புதம்மாள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ' நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அற்புதம்மாளிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து வாக்குறுதி கொடுத்தது தொடர்பாக அற்புதம்மாள் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.