ஆர்எஸ்எஸ் “ப்ளான்”.. அப்பாவு பங்கேற்கும் “இந்து மதம் அறிவோம்” மாநாடு! அனுமதிகோரி ஹைகோர்ட்டில் மனு
சென்னை: தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் அதற்கு அனுமதியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், "கபாலீஸ்வரர் கோயில் கல்வெட்டியில் இருந்து இந்து மதத்தை தெரிந்துகொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கலைவாணர் அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டு இதில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது இந்த கூட்டத்திற்கு அனுமதிகோரிய மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே இந்த மாநாட்டுக்கு அனுமதியளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு தெய்வநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுவதாக் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். திட்டம்
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்காத ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்கும் வகையில், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள வாக்குரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட வரைவை உருவாக்கி உள்ளது.

மாநாடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதசார்பின்மை, சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், யாரும் ஒற்றுமையோடு வாழக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் "கபாலீஸ்வரர் கோயில் கல்வெட்டியில் இருந்து இந்து மதத்தை தெரிந்துகொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த முன்பதிவு செய்தோம்.

சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ள இருக்கும் இந்த மாநாட்டிற்கு அனுமதிகோரிய மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே இந்த மனுவை பரிசீலனை செய்து மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications