இன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நாளாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை
சென்னை: மேற்கு வங்கத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 10 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வரி உயர்வு ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற இந்தியாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்தது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இருப்பினும், எப்போது ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. மாறாக சில முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

மாற்றம் இல்லை
மேற்கு வங்கத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அங்கு 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 10 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10ஆவது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.8 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 85.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைநகரில் எவ்வளவு
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 80.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.98 ரூபாய்க்கும், டீசல் 87.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 90.77 ரூபாய்க்கும் டீசல் 83.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை
தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 62.95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பரவல் சர்வதேச அளவில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபெக் நாடுகள்
ஏற்கனவே கடந்தாண்டு லாக்டவுன் காரணமாகக் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகளுக்குப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாகவே, இந்தாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருந்து குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் வருவாய் இழப்பு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications