"விமானத்தில் விளையாட்டு.." மன்னிப்பு கேட்ட "கட்சி தலைவர்.." செந்தில் பாலாஜி திடீர் ட்வீட்.. பரபர
சென்னை: போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், அக்கட்சியின் தேசிய இளைஞரணி தலைவரும் விமானத்தில் ஏறும்போது எமெர்ஜென்சி கதவை திறந்து விளையாடியதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். போட்டோசாப் கட்சியின் மாநிலத் தலைவர் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார்?
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ட்விட்டரில் நேரடியாகவும், பகடி செய்யும் வகையிலும் இவர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருவதுடன், மீம் கிரியேட்டர்களும் செந்தில் பாலாஜியின் கருத்துக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அண்ணாமலை வாட்ச் விவகாரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் வாட்ச் சர்ச்சை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட செந்தில் பாலாஜி, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

ஆடு வளர்த்துச் சேர்த்த பணமா?
அவர் வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசிய வியாதி, மன்னிக்க.. தேசியவாதி, ஆடு வளர்த்துச் சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா?" என்று வெளியிட்டு இருந்தார்.

அண்ணாமலை பதில்
இதற்கு அண்ணாமலை பதிலளிக்கையில், விரைவில் சம்பளக் கணக்கையும், வாட்ச் வாங்கிய பில்லையும் வெளியிடுவதாகவும், தன்னை விட தனது மனைவி 7 மடங்கு அதிகம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார். திமுகவினர் இதேபோல் சொத்து பட்டியலை வெளியிட தயாரா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

கம்பி கட்டும் கதைகள்
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் எனக் கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

பில் தயார் செய்ய வேண்டுமா?
தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" எனக் கேட்டு இருந்தார்.

போட்டோஷாப் கட்சி தலைவர்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள செந்தில் பாலாஜி, "கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் 'எமர்ஜென்சி' கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள்.

மன்னிப்புக் கடிதம்
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications