இலங்கை தொடர் குண்டுவெடிப்பு… திட்டமிட்ட அரசியல் சதி…? சந்தேகம் கிளப்பும் சீமான்
Recommended Video
சென்னை:இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் என ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.
நாடே பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா, உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.

சீமான் அறிக்கை
தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்து உள்ளது. அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

தாங்கொணா துயரம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தை தருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் வெளியாகியிருக்கிற செய்திகள் பெரும் கவலையை தருகின்றன.

பெரும் ஐயம்
ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு இக்கோரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2 லட்சம் தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி, நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தாக்குதலானது பெரும் ஐயத்தை தோற்றுவிக்கிறது.

என்ன மர்மம்?
அண்மைக்காலமாக மசூதிகள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த தாக்குதல் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது. இந்திய உளவு அமைப்பு இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன?

என்ன காரணம்?
இலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற தாக்குதல் சிங்கள அரசு மீதே ஐயத்தை தோற்றுவிக்கிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துச் சிங்கள மக்களிடையே அரசியல் செய்திட்ட சிங்களப் பேரினவாத அரசு இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன காரணம் கற்பிக்கப் போகிறது?

உலக நாடுகளின் பதில்
தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது?. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்த போது துணை நின்ற இந்திய அரசு, மத ரீதியிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது?

பாதுகாப்பு கேள்விக்குறி
2009யில் நடைபெற்ற சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பிறகு மிகவும் பாதிப்பிலிருந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இத்தாக்குதல் மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த சதிச் செயலுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் எவராயினும் அவர்களை தண்டிக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் மீது பழி
முதற்கட்ட விசாரணையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் தாக்குதலுக்கு, இஸ்லாமியர்கள் மீது பழிபோடும் வடஇந்திய ஊடகங்களின் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கச் செய்யும் மடைமாற்றச் செயலாகும்.

விசாரணை வேண்டும்
ஆகவே, சரியான விசாரணையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும், தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications