சக உயிர்களை காக்க.. தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்.. வீடியோ வெளியிட்ட முதல்வர்
சென்னை: கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிளாஸ்மா தானம் வழங்க தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் தானம் செய்தவன் மூலம் பல உயிர்கள் காக்கப்படும். தயங்காமல் தானம் செய்வோம்! சக உயிர்களை காப்போம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமான சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் அதிக அளவு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக அவர்களால் இரு உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால் இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரத்தத்தில் இருந்து
அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிளாஸ்மா தெரபியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்மாவை கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தி குணப்படுத்தப்படும் முறை தான் பிளாஸ்மா தெரபி.
பிளாஸ்மாவால் குணம்
பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ள icmr, cdsco வின் அனுமதியை பெற்றுள்ளது தமிழக அரசு. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி மூலம் 26 பேருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு இதுவரை 24 பேர் முழுவதும் குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் அமையும்
ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவின் 2வது பிளாஸ்மா வங்கியாக அமையும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஒருவர் குணமடைந்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா தெரபி ஆராய்ச்சி துவங்கப்படவுள்ளது.
விதிமுறைகள்
பிளாஸ்மா தானம் அளிப்பதற்கான விதிமுறைகள்: பிளாஸ்மா தானம் செய்பவர் 18-65 வயது உடையவராக இருக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு பின் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்யலாம். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளிவிட்டு 2வது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டுமுறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும். aphaereals கருவியின் உரிமம் பெற்ற இரத்த வங்கிகள் மட்டுமே பிளாஸ்மா தானம் பெற இயலும்.
தானம் கொடுக்க முடியாதவர்கள்
உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய், போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.
|
முதல்வர் கோரிக்கை
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிளாஸ்மா தானம் வழங்க தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் தானம் செய்தவன் மூலம் பல உயிர்கள் காக்கப்படும். தயங்காமல் தானம் செய்வோம்! சக உயிர்களை காப்போம்!" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.