பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை- புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க நாளை தமிழகம் வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி இருக்கிறது. ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வருகை தந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். டெல்லியில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார் பிரதமர் மோடி.. அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காரில் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும் சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயான 4-வது புதிய பாதை, விழுப்புரம் - கடலூர்- மயிலாடுதுறை - தஞ்சாவூர், மயிலாடுதுறை- திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக அர்ஜூன் எம்.பி.டி. எம்.கே-ஐஏ ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைக்கிறார். இதன்பின்னர் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருடன் தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.