"வாட்டர் டாக்சி.." ஜஸ்ட் 25 நிமிடம்.. மும்பையில் ஒரு மூலையிலிருந்து மறு பக்கம் பயணம் செய்ய முடியும்
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டாக்சி சேவை மும்பை நகரில் இயக்கப்படவிருக்கிறது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
மும்பை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையிலும், புதிய போக்குவரத்து வசதியை அறிமுகம் செய்வதற்காகவும் மும்பையில், அதிநவவீன வாட்டர் டாக்சி சேவை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதிவேகம் கொண்ட வாட்டர் டாக்சியில், ஏசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நேரங்களிலும் இந்த வாட்டர் டாக்சி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்டர் டாக்சி சேவையை மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே இயக்கப்படவுள்ளது. மும்பையிலிருந்து நவி மும்பை 30 கிமீ தொலைவில் உள்ளது. இதன் நீர்வழிப்பாதையில் வாட்டர் டாக்சி சேவையை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை நிதின் கட்கரி அமைச்சரான பின்னர் இந்த திட்டம் சூடுபிடித்திருக்கிறது.
மும்பை வாட்டர் டாக்சி மும்பை துறைமுக கழகம், மகாராஷ்டிரா மேரிடைம் வாரியம், நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று நிறுவனங்கள் இந்த வாட்டர் டாக்சி சேவையை அளிக்க உள்ளன. மேலும் ஒரு நிறுவனம் விரைவில் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை வாட்டர் டாக்சி சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைப்பார். நீர்வழிப் போக்குவரத்தினால் மும்பை நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் 25 நிமிட பயண நேரத்தில் இணைக்கப்படும்.
இந்த வாட்டர் டாக்சி சேவைக்கு குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ரயில், பேருந்து போல மாதாந்திர பயண அட்டைகளும் தரப்படும். அளவில் சிரயது முதல் பெரியது வரை வாட்டர் டாக்சிகள் இருக்குமாம். கார் போன்றவற்றையும் இவற்றில் எடுத்துச் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்பட்ட பின்னர் மும்பையின் தரம்தர், தானே, கன்ஹோஜி ஆங்ரே தீவு, கரஞ்சா, கரஞாடே, பெலாபூர், ஐரோலி, வஷி, நெருல், கந்தேரி தீவுகள் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் போன்ற பகுதிகளுக்கும், எலிஃபண்டா தீவுகளுக்கும் இந்த வாட்டர் டேக்ஸி சேவை நீட்டிக்கப்படுகிறது.
இந்தியவிலேயே முதல் முறையாக வாட்டர் டாக்ஸி சேவை மும்பையில் தொடங்கப்பட இருப்பதால் மும்பை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications