தேசிய கீதத்தை அவமதிப்பதா? ஆளுநர் ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு! திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்த பாமக
சென்னை: தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயல் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முடித்துக்கொண்டு தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே சென்றதும் வருத்தமாகவே இருக்கிறது என பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட பல வார்த்தைகள், முக்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் முன்பாகவே அவருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் அவையிலிருந்து பாதியில் வெளியேறினார்.
ஆளுநர் ரவிக்கு உரை திடீரென தரப்பட்டதா? வானதி வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் பதிலடி தந்த
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்த நிலையில் அரசு எழுதிக்கொடுத்த உரையை மாற்றியதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாமகவும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார்.
அவமதிக்கும் செயல்
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை. ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்.
தேசிய கீதத்திற்கு முன் வெளியேறுவதா?
அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.
கருத்து வேறுபாடு நல்லதல்ல
அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்." இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் ஆளுநருக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஜிகே மணி வருத்தம்
சட்டப்பேரவை நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக எம்.எல்.ஏ. ஜி.கே மணி, "தமிழ்நாட்டின் பின் தங்கிய மாவட்டமான தருமபுரியின் ஒக்கேனக்கலுக்கு காவிரி உபநீர் கொண்டு வரும் வரும் திட்டத்தை எதிர்பார்த்தோம். அது இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முடித்துக்கொண்டு தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே சென்று இருக்கிறார். இதுவும் வருத்தமாகவே இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதை சொல்கிறோம்." என்றார்.