ஆஹா..மறுபடியும் முதல்ல இருந்தா.. 32 வருஷ ஏக்கம்.. பாமக எடுத்த அதிரடி முடிவு.. பலிக்குமா ஆட்சி கனவு?
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி; எங்கள் தலைமையில்தான் கூட்டணி; ஆட்சியை அமைப்போம், அன்புமணி ராமதாஸை முதல்வராக்குவோம் என மீண்டும் 2016-ம் ஆண்டு முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறது பாமக.
சென்னையில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி.யும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 2026 தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர்.
பாமகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு என்பதாகவே கடந்த 32 ஆண்டுகால பயணம் இருந்து வருகிறது.
2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில்தான் கூட்டணி.. ஆட்சி அமைப்பதே இலக்கு: டாக்டர் ராமதாஸ்
அதிமுக, திமுக கூட்டணி
1989-ம் ஆண்டு பா.ம.க. தொடங்கப்பட்ட போது நடந்த லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் பாமக வென்றது. 1996 சட்டசபை தேர்தலில் மதிமுக, சி.பி.எம், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் என 3-வது அணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. 1998 லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக அணியில் பா.ம.க. இடம்பெற்றது. அதாவது பாமக, பெரிய கட்சிகளுடனான கூட்டணி பயணத்தை முதன் முதலாக தொடங்கியது. 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இருந்து விலகி திமுகவுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க.
கூட்டணி தாவல்
2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமக. 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் 2006 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலேயே நீடித்தது பா.ம.க. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்து கொண்டது. 2011 சட்டசபை தேர்தலின் போது மீண்டும் திமுக கூட்டணிக்கு தாவியது பா.ம.க.
அன்புமணி முதல்வர் வேட்பாளர்
2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது. ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக பிரகடனம் செய்து தனித்து களம் கண்டது பாமக. அத்தேர்தலில் பாமக பெருந்தோல்வியை சந்தித்தது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் அதிமுக அணியில் இடம்பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் பாமக 5 இடங்களில் வென்றது. ஆனால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி.
மீண்டும் முதலில் இருந்து..
இப்போது மீண்டும் 2016-ம் ஆண்டு போல அன்புமணியை முதல்வராக்க பாமக தலைமையிலான தனி கூட்டணி , தனி அணி அமைப்போம் என்று அறிவித்திருக்கிறது பாமக. அக்கட்சியைப் பொறுத்தவரை வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ஆகப் பெரும் ஆயுதமாக பார்க்கிறது. இந்த இடஒதுக்கீட்டு விவகாரம் மூலம் வன்னியர் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்பது பாமகவின் கணக்கு. ஆனால் வன்னியர்கள் ஒட்டுமொத்தமாக பாமகவுக்கு வாக்களிப்பார்களா? அதுவும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு இடங்களை பாமகவால் பெற முடியுமா? என்பது சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.