தனியார் வசமாகும் என்எல்சி? ‘A'ல் ஆரம்பிக்கும் நிறுவன வசமாகிறது? 2 அமைச்சர்கள் உடந்தை..அன்புமணி பகீர்
சென்னை : என்எல்சி நிர்வாகம் தனியார் மையமாக போகிறது. இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான 'ஏ' என்ற வார்த்தையில் ஆரம்பிக்கக் கூடிய அந்த நிறுவனத்திற்கு கொடுக்கத்தான் இவ்வளவு அவசரமாக நிலத்தை பிடுங்குவதற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு திமுக அமைச்சர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
என்எல்சிக்கு நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத நிலையில் அதனை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
அதே நேரத்தில் அந்நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

என்எல்சி
இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான 'ஏ' என்ற வார்த்தையில் ஆரம்பிக்கக் கூடிய நிறுவனத்துக்கு என்.எல்.சி.யை கொடுக்கத்தான் இவர்கள் இவ்வளவு அவசரமாக நிலத்தை பிடுங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். என்எல்சி விவகாரத்தை பொறுத்தவரை, ஒரே பகுதியில் முப்போகம் விளையக்கூடிய 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்குவதற்கு என்எல்சி நிறுவனம் துடித்துக் கொண்டிருக்கிறது. நெல். கரும்பு. வாழை. முட்டைக்கோஸ். கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்ற அந்த நிலத்தை பிடுங்கி, அதிலிருந்து நிலக்கரியை விட தரக்குறைவான பழுப்பு நிலக்கரியை எடுப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது என்எல்சி.

அன்புமணி ராமதாஸ்
ஏற்கனவே 37 ஆயிரம் ஏக்கர் இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலையில்லை, வாழ்வாதாரம் இல்லை. 1956 -ல் நிலம் கொடுத்தவருக்கு இன்று வரை இவர்கள் கொடுப்பதாக கூறிய நிலத்திற்கு பட்டா வழங்கவில்லை. ஆனால் மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்குவதற்கு என்எல்சி நிர்வாகம் துடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நம்மை தவிர இது பற்றி வேறு ஒரு கட்சிக்கு அக்கறை உள்ளதா? ஒரு கேள்வி கேட்டு இருப்பார்களா?

நிலத்துக்கு போராட்டம்
நாம் கருத்துக்கணிப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்து களத்தில் இறங்கிய பிறகு, இப்போது சிலர் நாங்கள் தான் என்று வந்திருக்கிறார்கள். கோவை அன்னூர் பகுதியில் ஒரு தொழில் பேட்டை தொடங்க வேண்டும் என ஏதோ ஒரு அளவுக்கு விவசாயம் செய்யக்கூடிய பகுதியில் 1600 ஏக்கர் நிலத்தை எடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தபோது, கடுமையாக எதிர்த்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களும், பாஜகவும் போராடியது. அண்ணா திமுக அங்க போய் போராடியது. எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி நேரடியாக சென்று, 1600 ஏக்கர் நிலத்தை எடுக்கக் கூடாது என்று போராடினார்கள். உடனடியாக அரசு அதை நாங்கள் எடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

25 ஆயிரம் ஏக்கர்
ஆனால் இங்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்எல்சிகாரன் பிடுங்க நின்று கொண்டிருக்கிறான். அங்கு அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் செல்கிறார், எஸ்பி செல்கிறார், அனைவரும் ஒன்று கூடி போராடும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் இதனை கேட்பதற்கு நம்ம பாட்டாளி மக்கள் கட்சியை தவிர வேறு யாரும் இல்லை.

'ஏ' என்ற வார்த்தை நிறுவனம்
தமிழகத்தில் விவசாய சங்கங்கள் இல்லையா? மற்ற கட்சிகளுக்கு இந்த விவசாய நிலம் கண்ணில் தெரியவில்லையா? ஏன் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பவில்லை? என்ன காரணம்? இந்த நிலம் கடலூர் மாவட்டத்தில் இருப்பதினாலா? இதிலுமா ஜாதி பார்க்கிறீர்கள்? இந்த என்எல்சி விவகாரத்தை நாங்கள் விடுவதாக இல்லை. இப்போது ஏன் இவர்கள் நிலத்தை எடுக்கிறார்கள் தெரியுமா? இந்த என்எல்சி நிர்வாகம் தனியார் மையமாக போகிறது. எந்த நிறுவனத்துக்கு கொடுக்கப் போகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான 'ஏ' என்ற வார்த்தையில் ஆரம்பிக்கக் கூடிய அந்த நிறுவனத்திற்கு கொடுக்கத்தான் இவர்கள் இவ்வளவு அவசரமாக நிலத்தை பிடுங்குவதற்கு களம் இறங்கி உள்ளார்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். ஆனால் தமிழக அரசாங்கமும் இதற்கு ஏன் துடித்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

திமுக அமைச்சர்கள்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு திமுக அமைச்சர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே அமைச்சர்கள் தான் நிலத்தை எடுக்கக் கூடாது என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்தார்கள் மாறிவிட்டது. நெய்வேலி பகுதியில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளேன். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு பிடி மண்ணைக் கூட எடுப்பதற்கு நான் விடமாட்டேன். எங்களின் கோரிக்கை என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்" என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications