ஆணினும் மேலானவள்...கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து
நீ இல்லையேல் ஈர்ப்புமில்லை; காப்புமில்லை என்று பெண்மையை போற்றியுள்ளார் கவிஞர் வைரமுத்து. மகளிர் தினத்திற்கு ட்விட்டரில் கவிதை பதிவிட்டுள்ளார்.
சென்னை: சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பெண்மையை போற்றி கவிதை படைத்துள்ளார். நீ இல்லையேல் ஈர்ப்புமில்லை; காப்புமில்லை என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது.
அரசியல் தலைவர்கள் பலரும் மகளிர் தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பான கவிதை எழுதி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர்
கடவுளாக்கி
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை
சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்
உன் தியாகத்தை -
திண்மையை -
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்
நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை
எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!
பெண்மையை போற்றும் வைரமுத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு மதிக்கப்படுதல்- புரியப்படுதல், நேசிக்கப்படுதல்- உரிமை பெறுதல் என்பதே ஒரு பெண் பெரிதும் எதிர்பார்ப்பு இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு மார்ச் 8 மட்டுமன்று மாதமெல்லாம் மகளிர் தினம்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்மாவில் இருந்து தானே அத்தனை ஜீவனும் ஆரம்பமாகிறது. பெண்ணின் பெருமைக்கு ஈடு சொல்ல தாய்மையை விட உயர்வேது என்றும் பெருமை பொங்க கவிதை எழுதியிருக்கிறார் வைரமுத்து.
கூட்டுப்புழுவா? பட்டுப்பூச்சியா?
கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் வைரமுத்து அச்சமே அகன்றுவிடு, மடமே மடிந்துவிடு, நாணமே நகர்ந்துவிடு, பயிர்ப்பே பறந்துவிடு. உடம்பு என்ன விறகா?- நான் உணர்ச்சி இழந்த சருகா?, காதல் சொல்வது தவறா?-நான் கல்லில் செய்த சுவரா?. சாத்திரக் கைதியாகின்றேன், சாதி படைத்த சிறைகளிலே, மங்கையாக நான் ஏன் பிறந்தேன், மலையில் முட்டிய நதிபோலே, ஆப்பிரிக்கக் காட்டில்நான் அணிலாய்ப் பிறப்பேனோ?, அட்லாண்டிக் கடலோடு ஆராமீன் ஆவேனோ? என்று எழுதியிருந்தார்.
கூட்டுப்புழுவா? பட்டுப்பூச்சியா?
மலையாள மலையில்நான் மணிக்கிளியாய் மாறேனோ?, மனிதப் பிறவியற்று மனம்போல் வாழ்வேனோ?, கூட்டுப் புழுவாய் மரிப்பேனோ?-இல்லை பட்டுப் பூச்சியாய் பறப்பேனோ? என்று வைரமுத்து எழுதிய கவிதை அனைவராலும் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.