எடப்பாடி போட்ட பிளான்.. குறுக்கே கட்டையைப் போட்ட காவல்துறை.. தடை மீறி நடத்த ஈபிஎஸ் திட்டம்?
சென்னை : நாளை எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி ஈபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கும் கடிதம் அளிக்கப்பட்டது.
ஆனால், சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதே இருக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஈபிஎஸ் தரப்பு அமளி
தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக இன்று கூடிய நிலையில், பேரவைத் தலைவர் கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபை சம்பவத்துக்கு எதிர்ப்பு
இதனையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு, திமுக தலைவர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டினார். இந்தச் சூழலில் சட்டசபையில் நடத்த சம்பவம் குறித்து அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

உண்ணாவிரதம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அனுமதி கோரி மனு
இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.

அனுமதி மறுப்பு - ஈபிஎஸ் திட்டம்
இந்நிலையில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்த அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications