லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? சாமானிய மக்கள் வரவே கூடாதா? - கைலி சர்ச்சையால் கொந்தளித்த ஜெயக்குமார்!
சென்னை : சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி கட்டிக் கொண்டு வந்த 'ஜெய்பீம்' குளஞ்சியப்பனை போலீசார் உள்ளே வர அனுமதி மறுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த'ஜெய்பீம்' கதையின் நிஜ பாத்திரமான ராஜாக்கண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன் புகார் அளிக்க வந்தார். அப்போது அவர் லுங்கி கட்டியிருந்த காரணத்தால், அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
பின்னர், கடைக்குச் சென்று வேட்டி வாங்கி அணிந்து கொண்டு வந்த பிறகே அவரை போலீசார் உள்ளே அனுப்பினர். இச்சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

லுங்கி கட்டிச் சென்றவருக்கு அனுமதி மறுப்பு
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 'ஜெய்பீம்' திரைப்படக் கதையின் உண்மையான பாத்திரமான ராஜாக்கண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன் என்பவர் புகார் ஒன்றை அளிக்க வந்தார். அப்போது குளஞ்சியப்பன் லுங்கி கட்டியிருந்ததால் ஆணையர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து ஆணையர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள கடை ஒன்றில் வேட்டி ஒன்றை வாங்கி அணிந்துகொண்டு சென்றார் குளஞ்சியப்பன். அதன்பிறகே அவரை ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

மக்களின் அன்றாட உடை லுங்கி
காவல் ஆணையர் அலுவலகத்தில் லுங்கி கட்டிச் சென்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுங்கி என்பது தமிழகத்தில் சாமானிய மக்கள் அணியும் உடையாக உள்ளது. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே செல்லும்போதும் லுங்கி அணிந்து தான் செல்கின்றனர். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் பெரும்பாலான நேரங்களில் அணியும் ஆடையாக லுங்கியே உள்ளது.

சாமானிய மக்கள் வரக்கூடாதா?
இப்படியான சூழலில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலேயே கைலி அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் லுங்கி அணிந்து வரும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரக்கூடாதா? உடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. நட்சத்திர விடுதிகளில் தான் கைலி அணியக்கூடாது, ஷூ கட்டாயம் என்ற உடைக் கட்டுப்பாடுகள் இருக்கும். சாமானியர்கள் வரக்கூடிய காவல்துறை அலுவலகங்களிலும் இந்த நிலையா என்ற விவாதம் எழுந்துள்ளது.

மறைமுகமாக சொல்லப்படுகிறதா?
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், "சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என்றும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications