"ஹீரோ".. திருப்பி அடித்த வரலாறு.. "சின்னதம்பி நெஞ்சில்தானே குத்துகிறான்".. உயிர்பெற்ற கருணாநிதி சிலை
கருணாநிதிக்கு அண்ணாசாலையில் இன்று மீண்டும் சிலை வைக்கப்படுகிறது
சென்னை: திரும்ப திரும்ப தன்னை புணரமைத்து கொண்டே எழுதி கொண்டிருக்கிறது வரலாறு.. அந்த வகையில்தான், கருணாநிதி சிலையின் சரித்திரம் இன்று மீண்டும் புத்துயிர் பெற்று, திமுகவினர் இதயத்தில் பூரிப்பை அள்ளி தெளித்து வருகிறது.
Recommended Video
1971, ஆகஸ்டு 14ம் தேதி ..!
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முக்கியமான ஒரு பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.. பெரியார் தலைமையில் விழா நடக்கிறது.
கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்ததற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழா அது...

பெரியார்
பெரியார் இறுதியில் உரையாற்ற வந்தார்.. கருணாநிதி பற்றி பேசிக் கொண்டே வந்தவர், "செயற்கரிய சாதனை செய்த தம்பிக் கருணாநிதிக்கு தலைநகரில் சிலை வைக்க வேண்டும்" என்று டக்கென சொன்னார்.. பெரியாரின் இப்படி ஒரு கோரிக்கையை அன்றைய தினம் அனைவருமே எதிர்பார்த்த ஒன்றுதான்.. காரணம், இதே கோரிக்கையை, 1968-லேயே சொன்னார் பெரியார்..! அதாவது அறிஞர் அண்ணா இருக்கும்போதே கருணாநிதிக்கு நிலை வேண்டும் என்று கேட்டவர் பெரியார்தான்..

மகிழ்ச்சி
எனினும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், மறுபடியும் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வெடித்தது.. இதை இந்த முறை கேட்டதும் பெரியார்தான்.. இப்படி பெரியார் சொன்னதுமே, மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார், மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து வந்து எழுந்து 1000 ரூபாய் நன்கொடையை அங்கேயே தந்தார்.. உடனே அதே மேடையிலேயே சிலை வைக்க ஓரளவு பணமும் வசூல் ஆகிவிட்டது... பெரியார் இப்படி பலமுறை ஆசைப்பட்டாலும்கூட, கருணாநிதிக்கு என்னவோ, அந்த அறிவிப்பில் அவ்வளவாக ஆசை இல்லை.. உடன்பாடும் இல்லை..

அண்ணாசாலை
"எனக்கு எதுக்கு இப்போ சிலை? முதலில் பெரியாருக்கு சிலை எழுப்புவோம்.. மற்றதை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஓபனாகவே சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, சொன்னபடியே, சென்னை சிம்சன் அருகே பெரியாருக்கு சிலையும் அமைத்தார் கருணாநிதி.. அதுவும் பெரியார் உயிருடன் இருந்தபோதே இந்த செயலை செய்து முடித்தார்.. இதனால் நெகிழ்ந்து போன திராவிட கழகம், கருணாநிதிக்கு சிலையை அமைக்கும் பணியை ஆரம்பித்தது..

தர்கா
அப்போதும் கருணாநிதி, தனக்கு சிலை வைப்பதில் விருப்பம் கிடையாது என்று சொன்னாலும், திராவிடர் கழகம் விடவில்லை.. அண்ணா சாலையில் உள்ள தர்கா பக்கத்திலேயே கருணாநிதி சிலையை நிறுவியது... மணியம்மை தலைமையில் நடந்த சிலை திறப்பு விழாவுக்கு, முதன்முதலில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி நிதி தந்தாரே, அதே குன்றக்குடி அடிகளார்தான் இந்த சிலையையும் திறந்து வைத்தார்.

3 விரல்கள்
கருணாநிதி நின்றுகொண்டு, வலது கையை தூக்கி, தன்னுடைய 2 விரல்களை மடித்து, 3 விரல்களைக் காட்டியபடி அந்த நிலை அமைக்கப்பட்டிருந்தது... இந்த சிலையை நிறுவியதும், திராவிடர் கழக தொண்டர்கள், திமுகவினர் நெகிழ்ந்து போனார்கள்.. ஆனால், 12 ஆண்டுகள் மட்டுமே இந்த மகிழ்ச்சிநீடித்தது.. எம்ஜிஆர் மரணமடைந்தபோது, இந்த சிலையை சிக்கல்கள் சூழ்ந்தன.. அதிமுக தொண்டர்கள் சிலர், கருணாநிதியின் சிலையை கடப்பாரையை கொண்டே ஓங்கி இடித்தனர்.. சிலையை தரைமட்டமாக்கினர்.. கருணாநிதி சிலை தூள் தூளானது..

ஸ்டைல் எழுத்து
இது தொடர்பான போட்டோவும் பத்திரிகையில் வந்தது.. சிலையை மார்பில் குத்தி உடைப்பது போன்ற படங்களும் வெளியானது.. அதை கருணாநிதியே பார்த்தார்.. உடனே முரசொலிக்கு தன் ஸ்டைலில் இவ்வாறு எழுதினார்..
"உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!"

நொறுக்கினர்
தன் சிலையை இடித்து தள்ளியவரையும் உடன்பிறப்பே என்று அழைத்து, வாழ்க என்று வாழ்த்தினார் கருணாநிதி.. இதற்கு பிறகு மீண்டும் சிலை வைக்கலாம் என்று திராவிடர் கழகத்தினர் கேட்டார்கள்.. ஆனால், வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கருணாநிதி.. அவரது பிடிவாதத்திற்கு பிறகு, வேறு யாருமே சிலை பற்றின பேச்சை எழுப்பவில்லை.. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, மீண்டும் அவருக்கு சிலை வைக்கும் குரல்கள் மெல்ல எழுந்தன...

கருணாநிதி
அதற்கேற்றபடி, திமுகவும் அரியணை ஏறியது.. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும், மீண்டும் கருணாநிதிக்கு சிலை என்ற கோரிக்கை வலுப்பெற்றது.. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி மீண்டும் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். அதற்கான அறிவிப்பைதான், சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.. அதன்படியே ரூ.1.56 கோடி செலவில் கருணாநிதி நிலை தயாராகி உள்ளது.. இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவால் திறந்து வைக்கப்படவும் உள்ளது.

முக்கியமான தினம்
கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது.. கருணாநிதி மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், மறுபடியும் சிலை வேண்டாம் என்று மறுப்புதான் தெரிவித்திருப்பார்.. ஆனாலும், திக, திமுகவினர் பிடிவாதத்துடன் சிலையை நிச்சயம் நிறுவியிருப்பார்கள் என்பது சந்தேகமில்லை.. இன்றைய தினம், திமுகவுக்கு மிக முக்கியமான தினம்.. ஸ்டாலின் பதவியேற்றதை போலவே, இந்த நாளும் திமுக வரலாற்றுக்கு புகழை சேர்க்கும் தினம்..

திராவிடர் கழகம்
அதுமட்டுமல்ல, கருணாநிதி இருந்தவரை சிலை வைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கடமை உணர்வை நிறைவேற்றி இருக்கிறார்கள் திராவிடர் கழகத்தினர்.. இப்போது நடப்பது திமுக ஆட்சி என்றாலும், இது கருணாநிதிக்கு செய்யக்கூடிய ஒரு நன்றியாகவே அவர்கள் கருதி உள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும்.

சரித்திரம்
எந்த ஒரு வரலாற்று நிகழ்விலுமே, சிலைகள் உடைக்கப்படுகிறது என்றால், அந்த தலைவர் அங்கு சரித்திரமாகிவிட்டார் என்றே அர்த்தம்.. உலகம் முழுவதும் சிலைகள் உடைக்கப்பட்ட வரலாறு அப்படித்தான் நமக்கு எடுத்து காட்டி வருகிறது.. ரஷ்யாவில் ஸ்டாலின் சிலையை சேதப்படுத்திய அளவுக்கு இந்த உலகம் வேறு யார் சிலையையும் சேதப்படுத்தியதாக தெரியவில்லை.. ஆனாலும் ஸ்டாலின் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.. அதுபோலவேதான் பெரியார், அம்பேத்கரும்.. இன்றுவரை இவர்களின் சிலைகள் நடுராத்திரி உடைக்கப்படுகிறது என்றால், இவர்களின் கருத்தியல்கள் இன்றும் உயிர்ப்புடன் நடமாடிகொண்டிருப்பதாகவே அர்த்தம்.

எம்ஜிஆர்
அதுபோலவேதான் கருணாநிதியின் சிலையும் கருதப்படுகிறது.. அன்று எம்ஜிஆர் மரணமடைந்தபோது எத்தனையோ சிலைகள் தமிழகத்தில் இருந்தாலும், தேடிவந்து கருணாநிதியை சிலையை, சுக்குநூறாக நொறுக்கி, உடைத்து சேதப்படுத்தினர் என்றால், அது "வெறும் சிலை இல்லை" என்பதை எதிர்தரப்பினர் உணர்ந்ததால்தான்.. இதோ இன்று மீண்டும் சிலையாகி, ஒய்யாரமாக நின்று வரலாற்றின் ஒரு பக்கமாகிவிட்டார் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி..!












Click it and Unblock the Notifications