பொங்கல் பரிசு + ரூ.1000.. ரேஷன் அட்டைகளுக்கு டோக்கன் தரும் தமிழக அரசு.. பெறுவது எப்படி? முழு விபரம்
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஜனவரி 2ம் தேதி பொங்கல் பரிசு திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை சென்னையில் துவங்கி வைக்கிறார். இதற்காக இந்த முறை டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்று திட்டமிட்டு முறையாக பொங்கல் தொகுப்பை வழங்கி இருந்தாலும் கூட சில இடங்களில் இந்த பொங்கல் தொகுப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கடந்த வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பரிசு
இந்த வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா இல்லை, பெரிதாக பேரிடர் இல்லை என்ற போதிலும் 1000 ரூபாய் வழங்கப்படுவது கவனம் பெற்றுள்ளது.

டோக்கன் முறை
ஆனால் இந்த பணத்தை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஜனவரி 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை சென்னையில் துவங்கி வைக்கிறார். ஜனவரி 3ம் தேதியில் இருந்து இந்த பணம் வழங்கப்பட உள்ளது. கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே இந்த பணத்தை பெற முடியும். அந்த டோக்கனில் இருக்கின்ற நாளில் மட்டும் பணத்தை பெற முடியும்.

எப்படி வழங்கப்படும்
அதன்படி 27ம் தேதியில் இருந்து ரேஷன் கடை ஊழியர்கள் உங்கள் வீடுகளில் வந்து டோக்கன் கொடுப்பார்கள். அந்த டோக்கனில் எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்று இருக்கும். ரேஷன் கடை அளவு, வசதி ஆகிவற்றை வைத்து ஒரு நாளைக்கு 100 முதல் 500 பேர் வரை இப்படி டோக்கன் பெறுவார்கள். இவர்கள் அந்த டோக்கனில் இருக்கும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்றால் வரிசையில் நிற்காமல் எளிதாக பணம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

என்ன இருக்கும்?
அந்த டோக்கனில் ரேஷன் கடை விவரம், நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு இந்த வார இறுதியில் பொங்கல் பரிசுகள் அனுப்பப்பட உள்ளன. அதோடு இனி ரேஷன் பொருட்களை இரவு நேரத்தில் அனுப்ப கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளுக்கு இரவு நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்க்க கூடாது. பகல் நேரத்தில்தான் பொருட்கள் செல்ல வேண்டும். இதை ரேஷன் கடை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொங்கல் பொருட்களை கொண்டு செல்வதில் இருந்து இந்த விதி தொடங்க உள்ளது. அதாவது பொங்கல் பரிசில் முறைகேடு நடக்க கூடாது என்பதால் பொருட்களை இரவு நேரத்தில் கொண்டு செல்ல கூடாது. ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பொருட்களை ஊழியர்கள் முறையாக பரிசோதித்துதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த முறை போல இந்த முறை முறைகேடு நடக்க கூடாது என்பதற்காக இந்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கண் விழி
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. பொங்கல் பரிசு வாங்க குடும்ப உறுப்பினர் ஒருவரின் கை ரேகை - ஸ்மார்ட் கார்ட் இரண்டும் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும். முறைகேடுகளை தவிர்க்க இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.. சில ரேஷன் கடைகளில் கண் விழி சோதனை அமைப்புகள் உள்ளன. அந்த வசதி உள்ள ரேஷன் கடைகளில் கண்களை காட்டி பொருட்களை வாங்க முடியும். நமது கண்களை லேசர் உள்ள மெஷினில் காட்டினால் போதும். கண்களை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது.

திட்டம் அமல்
அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பொங்கல் நேரத்தில் இந்த திட்டம் பெரம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அமலில் இருக்கும். கண்களை காட்டி மக்கள் பொங்கல் பரிசு பொருட்களை வாங்க முடியும். அதன்பின் மற்ற மாவட்டங்களில் விரைவில் திட்டம் அமலுக்கு வரும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் அமலில் இல்லாத இடங்களில் கை ரேகை மூலம் மக்கள் பொருட்களை வாங்க முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications