விஜயகாந்த்- ஸ்டாலின் சந்திப்பில் உடல்நலம் மட்டுமில்லை.. அரசியலும் பேசப்பட்டது.. போட்டுடைத்த பிரேமலதா
சென்னை: விஜயகாந்த்- ஸ்டாலின் சந்திப்பில் உடல்நலம் மட்டுமில்லை. அரசியலும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாமக- பாஜக கூட்டணி அமைந்தது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் , விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டது என்றார். இதையடுத்து அடுத்தடுத்து திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என பல தலைவர்கள் சந்தித்தனர். எனினும் இவர்களில் திருநாவுக்கரசரை தவிர்த்து மற்ற அனைவரும் உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட்டது என்றனர்.
திமுக சார்பில்
இந்த நிலையில் தேமுதிக அதிக தொகுதிகளை கேட்பதாகவும் அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது. இதனால் திமுக சார்பில் திருநாவுக்கரசர் தூது வந்ததாக கூறப்பட்டு வந்தது.
அலுவலகத்தில்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தார். அதன்பேரில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி இன்று தேமுதிக அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
உடல்நலம்
அப்போது அவர் கூறுகையில் கேப்டனின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த ஸ்டாலினுக்கு நன்றி. விஜயகாந்த்- ஸ்டாலின் சந்திப்பில் உடல்நலம் பற்றி மட்டும் பேசப்படவில்லை. அனைத்தும் பேசப்பட்டது.
கூட்டணி
தேமுதிகவின் ஒட்டுமொத்த அரசியல் பலம் பொதுக்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் தெரியும். 3-ஆவது அணி அமைய வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் பெரிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சித்து வருகின்றன. தேமுதிகவின் பலத்துக்கு ஏற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். தேமுதிகவுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.
தோல்வி
எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். ஒரு தேர்தலை வைத்து வெற்றி தோல்விகளை முடிவு செய்ய முடியாது என்றார் பிரேமலதா. உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே வந்தேன் என தலைவர்கள் கூறிய நிலையில் அரசியலும் பேசப்பட்டது என பிரேமலதா கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.