5 பிரபல கல்லூரிகள்.. கூகுள் பே செய்தால் கஞ்சா சப்ளை.. “அதிரடி வேட்டை” நெட்வொர்க்கை தூக்கிய போலீஸ்!
சென்னை : தாம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்களை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கூகுள் பே மூலம் பணம் பெற்று மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விசாரணையைத் துவக்கிய போலீசார், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர்.

கஞ்சா வேட்டை
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரபல கல்லூரியில்
சென்னை பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வண்டலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வரும் விஷால் எனும் மாணவருக்கு போன் செய்தால், அவர் கஞ்சா எடுத்து வந்து மாணவர்களுக்கு சப்ளை செய்வார் என தகவல் கிடைத்துள்ளது.

கஞ்சா பொட்டலம்
இதையடுத்து விஷாலை தாம்பரம் அருகில் வைத்து பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 2 பொட்டலம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விஷாலிடம் விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கேட்கும் மாணவர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்று கொண்டு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் மேலும் விஷாலுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் பரத் என்ற மாணவரும், இன்னொரு கல்லூரியில் பி.காம் பயின்று வரும் அப்துல் அல்தாப் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் வேட்டை
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் ரெட்டி மற்றும் ஜிதேந்திரநாத ரெட்டி ஆகியோர்கள் சேலையூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு பயின்று வருவதாகவும் அவர்கள் கல்லூரிக்கு அருகில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சேலையூர் தனியார் கல்லூரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

கூண்டோடு கைது
விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் சேலையூர் மப்பேடு பகுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் ரெட்டி மற்றும் ஜிதேந்திரநாத ரெட்டி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.1 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை ஆய்வாளர் சரவணன் மார்த்தாண்டனை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications