நெருங்கிய நண்பர்கள்! எம்ஜிஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது ஏன்? உருக்கமாக சொன்ன ராதாரவி
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனை (எம்ஜிஆர்) தனது தந்தை எம்.ஆர். ராதா எதற்கு சுட்டார் என்பது குறித்து அவரது மகனும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் எனப்படும் மூன்றெழுத்து மந்திரம்... ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மனதில் ஒலிக்கும் மந்திரம். அவர் மறைந்தாலும் இன்று வரை தங்களது நெஞ்சில் எம்ஜிஆரின் பெயரையும் உருவத்தையும் ஏராளமானோர் பச்சைக்குத்தியுள்ளனர்.
திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் தங்கமாக ஜொலித்தவர் எம்ஜிஆர். இவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே இவரை பற்றி இந்த பூமி இருக்கும் வரை பேசும். அந்தளவுக்கு நிறைய திட்டங்களை முதல்வராக இருக்கும் போது செய்துள்ளார்.

அரசியல்
அரசியலுக்கு வருவதற்கு முன்பும் ஏராளமானோருக்கு எம்ஜிஆர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். நிறைய மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என எம்ஜிஆருக்கு கடிதம் எழுதுவார்களாம். அந்த கடிதங்களை படித்துவிட்டு அதன் உண்மைத்தன்மையை அறிந்து மின்னல் வேகத்தில் உதவிகளை செய்வதில் அவருக்கு நிகர் அவரே!

சினிமாவில் வாய்ப்பு
சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, நிறைய ஹீரோ, ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி அவர்களது வாழ்வில் ஒளியேற்றியவர். இப்படி மக்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆரை கடந்த 1964 ஆம் ஆண்டு எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டார். அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து சென்ற தோட்டா, எம்ஜிஆரின் தொண்டையில் சிக்கியது.

எம்ஜிஆருக்கு சிகிச்சை
இதனால் எம்ஜிஆருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஏதோ சினிமா சூட்டிங்கில் எம்ஜிஆருக்கு அடிப்பட்டதாக மக்கள் நினைத்தனர். ஆனால் எம்ஜிஆரை எம்.ஆர். ராதா சுட்டுவிட்டார் என தெரிந்ததும் மக்கள் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தனர். இவ்வாறு எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள்.

உண்மையில் நடந்தது என்ன
ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து ராதாரவி ஒரு தனியார் தொலைகாட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்க அப்பாவும், எம்ஜிஆரும் நெருங்கிய நண்பர்கள். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர் பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தை எடுக்க ரூ 1 லட்சம் தேவைப்படுவதாக கூறியிருந்தார்.

பணம்
உடனே என் தந்தை அவரிடம் நான் உனக்கு பணம் தருவதாக தெரிவித்தார். மேலும் அந்த படத்தில் நடிக்க எம்ஜிஆரின் கால்ஷீட்டையும் வாங்கி தருவதாக சொல்லியுள்ளார். அது எனது தந்தையின் 100ஆவது படமாகும். இதற்காக ஆலந்தூரில் உள்ள சேட்டு ஒருவரிடம் எங்கள் தோட்டத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ 1 லட்சம் பணம் கொடுத்தார்.

தயாரிப்பாளர் வாசு
அந்த பணத்தை தயாரிப்பாளர் வாசுதான் என் தந்தைக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் கடன் வாங்கினார். ஆனால் அந்த 1 லட்சம் பணத்தை எம்ஜிஆர் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். இதுதான் என் தந்தைக்கும் எம்ஜிஆருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்தது. பணத்தை திருப்பி கொடுக்காமல் 4 நாட்களுக்கு எம்ஜிஆர் அலைகழித்துள்ளார்.

கோபத்தில் சுட்ட எம்.ஆர்.ராதா
இது என் தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் என் தந்தை எம்ஜிஆரை சுட்டுவிட்டார். இந்த வழக்கில் என் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த தண்டனை 3 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. அப்போது ஆட்சி மாற்றம் வந்தது. எனது தந்தையை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். அவர் இல்லாவிட்டால் என் தந்தையை ஜெயிலிலேயே முடித்திருப்பார்கள் என ராதாரவி உருக்கமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications