வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் சில மாவட்டங்களில் மழையும் பெய்து குளிர்வித்து வருகிறது. இனிவரும் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து வெயில் சுட்டெரிக்கும் என்று கூறப்பட்டாலும் சில ஊர்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video
கடந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. பூதபாண்டியில் 3 செமீ மழை பதிவகியுள்ளது. இரணியல்,சூரலக்கோடு, பேச்சிப்பாறை, காங்கேயம், பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
சித்தார், புத்தன் அணை, பொள்ளாச்சி, உதகமண்டலம், பெருஞ்சாணி அணை,தேவாலா, குந்தா பாலம், திருச்செங்கோடு பகுதிகளில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனத்தால் மழை
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

சூறாவளி காற்று வீசும்
இன்று லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வருகிற 4ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications