ராஜகண்ணப்பனின் அமைச்சர் பதவிக்கு சிக்கல்.. கட்டம் கட்டும் ஆணையம்.. முதல் ஆளாக வெளியே போகிறாரா?
சென்னை : தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சாதி ரீதியாக பிடிஓ-வை அவமதித்தது தொடர்பான விவகாரத்தில், அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வன்கொடுமை புகார் குறித்த அறிக்கை கிடைத்ததும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுவதால், அவர் வகித்து வரும் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் உலவி வருகிறது.

இலாகா மாற்றம்
திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செயல்பட்ட ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பலமுறை சாதியைச் சொல்லி தன்னை அவமானப்படுத்தியதாக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவர் புகார் கூறியிருந்தார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டது. போக்குவரத்துத் துறை இலாகா பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

சாதிய அவமதிப்பு
இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு எனவும், சாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் ஒருவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றுவது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், பிடிஓவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டது.

சென்னை வந்துள்ள துணைத் தலைவர்
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள அவர், தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

விளக்கம் கேட்ட ஹல்தார்
அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த பிடிஓவை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக அவமதித்தது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் அமைச்சர் திட்டியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆய்வு செய்யப்படாததை அறிந்த அருண் ஹல்தார், வீடியோ பதிவை தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் விளக்கம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் அறிக்கை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அருண் ஹல்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகார் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடவடிக்கை
மேலும் பேசிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார், இச்சம்பவம் தொடர்பான வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழக அரசின் அறிக்கை வந்த பிறகு, ஆளுநர், முதல்வர் மூலமாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரிடம் விசாரணை
அமைச்சர் ராஜகண்ணப்பனிடமும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக அவமதித்தது உறுதியானால், அவரை அமைச்சர் பதவியை விட்டு நீக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

அமைச்சர் பதவி பறிபோகும்?
அதன்படி, ராஜகண்ணப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஓராண்டுக்கும் மேலான இந்த காலகட்டத்தில் இதுவரை யாருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படவில்லை. இலாகாக்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர் பதவி பறிக்கப்படும் முதல் ஆளாக ராஜ கண்ணப்பன் இருப்பாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications