ரஜினி கட்சி, இப்போதைக்கு இல்லையாம்.. தேர்தல் நெருங்கும்போது வாய்ஸ் மட்டும் வரலாமாம்!
Recommended Video

சென்னை: ரஜினி கட்சி இப்போதைக்கு இல்லையாம், வெறும் வாய்ஸ் மட்டும்தானாம். இதுதான் இப்போதைக்கு ஹாட் டாக் ஆக வலம் வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது பரபரப்பாகவோ ஏதாவது பேசுவது வழக்கம். அதன்பின்னர் அந்தப் பேச்சை அப்படியே அம்போவென விட்டுவிடுவார் என்ற விமர்சனம் எப்போதும் அவர் மீது உண்டு.

இந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு விரைவில் கட்சி ஆரம்பித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்காக அடிமட்டத்திலிருந்து கட்சியை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் நியமனம் என்றெல்லாம் தொடர்ந்து நடந்தது.
ரஜினி மன்ற பொறுப்புகளை கவனிக்க லைக்கா நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கம் அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று தூக்கி எறியப்பட்டார். அதனையடுத்து அதிமுகவிலிருந்து வெளியேறிய டாக்டர் இளவரசன் என்பவர் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப் பட்ட நாளில் இருந்தே இவர் மீது புகார் பட்டியல் வாசிக்கப்பட்டு வந்தது.
தனக்கு வேண்டாதவர்கள், நீண்டகாலமாக ரசிகர் மன்றத்தில் தீவிரமாக வேலை செய்தவர்கள் என்று பலரையும் மன்றத்திலிருந்து தூக்கியடித்தார். இது குறித்த புகார்கள் ரஜினிக்கு சென்றபோதும் அப்போது அவரது நடவடிக்கைகள் இளவரசனுக்கு ஆதரவாகவே இருந்தன.
இவருக்கும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி ராஜசேகர் என்பவருக்கும் ஏழாம் பொருத்தம். ஏற்கனவே மன்றப் பிரச்சனைகளுக்கு ஐ பி எஸ் அதிகாரி ராஜசேகர் தான் காரணம் என மன்ற நிர்வாகிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில் இளவரசனுக்கும் ராஜசேகருக்கும் பற்றிக் கொண்டது. இதில் ராஜசேகருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என கைவிரிக்க இளவரசன் ராஜினாமா செய்து விட்டார். இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ள உள் குத்துகள்.
இப்போது விஷயம் என்னவென்றால், ரஜினி கட்சி ஆரம்பிப்பது மீண்டும் தள்ளிப் போகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ஏதாவது ஒரு தேசியக் கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவரது எண்ணம். ஆகவே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் தனக்கென ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பித்து விட்டு அதன் பின்னர் கட்சிக்கான பெயர் உட்பட பிற பணிகளை கவனிக்கலாம் என்பது ரஜினியின் திட்டமாம். அதற்காக தொலைகாட்சி சேனலுக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் பாட்ஷா பட விழாவில் பேசி அதன் பின்னர் திமுக - த மா க கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தது போல இப்போதும் வாய்ஸ் மட்டும் கொடுக்கலாம் என்றும் ரஜினி யோசிக்கிறாராம். ஆனால் ரஜினி இப்போது இருக்கும் அரசியல் சூழலில் வாய்ஸ் கொடுத்தாலும் அது எந்த அளவுக்கு செயல்படும் என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியவரும். ஏனெனில் பாபா பட பிரச்சனையின்போது ரஜினி பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அது அந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை. மாறாக பாமக வெற்றி பெற்றது.
இப்போது இருக்கும் அரசியல் களம் படு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் இவர் தேர்தலை சந்திக்காமல் வெறுமனே வாய்ஸ் மட்டும் கொடுப்பது பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே .. அதை விட முக்கியமாக, இருக்கும் செல்வாக்கையும் அடித்துக் கொண்டு போகும் அபாயமும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications